ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் டிசம்பர் 18ம் தேதி நடக்கவுள்ள நிலையில், மொபைல் போன்கள் மற்றும் உடைகள் மீதான வரிகளை உயர்த்தக் கூடும் என்று கூறப்படுகிறது.
ஜிஎஸ்டி வரி உயர்வால், இது முந்தைய வரி வசூல் பற்றாக்குறையை சமன் செய்யவும், இது தவிர பல மாநிலங்களுக்கு நிலுவையில் உள்ள இழப்பீடு தொகையை சரிசெய்யவும் பயன்படும் என்றும் கருதப்படுகிறது.
தற்போது மொபைல் விற்பனைக்கான ஜிஎஸ்டி விகிதம் 12 சதவிகிதமாகும். இதே மொபைல் போன் பாகங்கள் மற்றும் பேட்டரிகள் 18 சதவிகித விகிதத்துடனும் விற்பனை செய்யப்படுகின்றன. இதே ஃபேப்ரிக்களுக்கு 5 சதவிகித ஜிஎஸ்டி விகிதம் நடைமுறையில் உள்ளது. இதே நூல் வகைகளுக்கு 12 சதவிகித வரியும் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னரே ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் செய்ய நினைத்தால் மக்களும், வணிகர்களும் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மேலும் ஏற்கனவே பொருளாதார பிரச்சனையில் உள்ள தொழில் துறையினர் வரி உயர்வால் மேலும் பாதிக்கப்படுவர். மத்திய மாநில அரசுகளுக்கும் வருவாயை அதிகரிக்க மாற்றத்தை ஏற்படுத்தும் போது பொதுமக்களும், தொழில் துறையினருக்கும், வணிகர்களுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று, தொழில்துறை வட்டாரத்திலும், பொதுமக்கள் தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அடுத்த வாரம் நடக்கவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெரிய மாற்றங்கள் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
ஏனெனில் ஒரு மொபைல் போன் உற்பத்தியாளர் கடந்த ஆண்டு கிட்டதட்ட 4,100 கோடி ரூபாய் திரும்ப பெற்றதாகக் கூறப்படுகிறது. தலைகீழ் வரி கட்டமைப்பின் பிரச்சனையில் அரசின் கவனத்தை இது ஈர்த்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் மொபைல் போன்கள் மற்றும் ஃபேப்ரிக் வரி விகிதங்களில் மாற்றம் இருக்கலாம் என்றும் பிசினஸ் ஸ்டேண்டர்டு பத்திரிக்கையில் வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தற்போது அனைத்து உற்பத்தி பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்தான ஜிஎஸ்டி வரி விகிதம், நான்கு அடுக்குகளின் கீழ் வருகின்றன. இது 5%, 12%, 18% மற்றும் 28% உள்ளிட்ட விகிதங்களை கொண்டுள்ளது. இந்த வரி விகிதங்களில் 1,000 கோடி ரூபாய் கூடுதல் வருவாயை பெற அரசாங்கத்திற்கு உதவக்கூடும் என்றும் கருதப்படுகிறது.