2023-24 ஆம் நிதியாண்டிக்கான பட்ஜெட் அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டிசம்பர் 17, சனிக்கிழமை இன்று டெல்லியில் இருந்து விர்ச்சுவல் முறையில் 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார்.
மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு (ஜிஓஎம்) தனது அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வியாழக்கிழமை சமர்ப்பித்தது.
இந்தக் கூட்டத்தில் பல முக்கியமான விஷயங்களுக்கு முடிவு எடுக்கப்பட்டத்தில் வரிக் குறைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்த நிலையில் இக்கூட்டத்தில் எந்தப் பொருட்கள், சேவை மீதும் புதிதாக வரி உயர்த்தப்படவில்லை, இதேவேளையில் பல பொருட்கள் மீது வரி குறைக்கப்பட்டு உள்ளது.
48வது ஜிஎஸ்டி கூட்டம்
மத்திய நிதியமைச்சர் தலைமையிலான இந்த 48வது ஜிஎஸ்டி கூட்டத்தில் பெட்ரோலில் சேர்ப்பதற்காகக் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு அலைக்கு அனுப்பப்படும் Ethyl alcohol-க்கு இதற்கு முன்பு 18 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்த நிலையில் கூட்டத்தில் 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது.
பருப்பு உமி
இந்தக் கூட்டத்தில் அனைத்துப் பருப்பு வகைகளின் உமி மற்றும் தவுடுகளின் மீதான 5 சதவீத வரியை 0 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் விவசாய துறையில் பிற கழிவுப் பொருட்கள் மீதான சுமை குறைந்துள்ளது. மேலும் Fryums CTH 19059030 கீழ் கொண்டுவரப்பட்டு 18 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது.
சர்க்கரை பாகு
ரப் (ரப்-சலாவத்) CTH 1702 இன் கீழ் வகைப்படுத்தப்பட்டு 18 சதவீத GST ஈர்ப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வெல்லப்பாகுகளிலிருந்து (molasses) சர்க்கரையைப் பிரித்தெடுத்த பிறகு, சர்க்கரை ஆலைகள் அதைச் சந்தையில் விற்கும், அதேசமயம் எஞ்சிய வெல்லப்பாகை மீண்டும் வேகவைத்து அதை ரப் சலவாத் (Rab salawat) வடிவமாக மாற்றுவோம், இது பொதுவாக விலங்குகளால் உண்ணக்கூடியது.
ஊக்கத்தொகை
ரூபே டெபிட் கார்டுகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள BHIM-UPI பரிவர்த்தனைகளை மக்கள் மத்தியில் ஊக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு, வங்கிகளுக்குச் செலுத்தும் ஊக்கத்தொகை, மானியத்தின் தன்மையில் இருப்பதால் வரி விதிக்கப்படாது என விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
8 விஷயங்களுக்கு மட்டுமே தீர்வு
நேரமின்மை காரணமாக 15 விஷயங்களில் 8 விஷயங்களுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் இன்று முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். ஜிஎஸ்டிக்கு மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களை அமைப்பது குறித்துக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை.
புகையிலை மற்றும் குட்கா
இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புகையிலை மற்றும் குட்கா மீதான வரி விதிப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் பட்ஜெட் கூட்டத்தில் சிகரெட்-ஐ தனித்தனியாக விற்பனை செய்யக் கூடாது மொத்தமாகப் பாக்கெட்-ல் தான் விற்பனை செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு வர வாய்ப்புகள் உள்ளது.
ஆன்லைன் கேமிங் மற்றும் கேசினோ
இதேபோல் இந்தியா முழுவதும் எதிர்பார்த்து இருந்த ஆன்லைன் கேமிங் மற்றும் கேசினோக்கள் மீதான ஜிஎஸ்டி குறித்துக் 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குற்றங்கள்
ஜிஎஸ்டி கவுன்சில் சனிக்கிழமையன்று சில குற்றங்களைக் குற்றமற்றதாக மாற்ற ஒப்புக்கொண்டது, இதன் மூலம் வழக்குத் தொடங்குவதற்கான வரம்பை 1 கோடி ரூபாயில் இருந்து 2 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது என்று வருவாய் செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.