இந்தியாவின் முறைமுக வரியை முழுமையாக மாற்றிய ஜிஎஸ்டி வரி அமைப்பின் கூட்டம் சுமார் 7 மாதத்திற்குப் பின் மீண்டும் கூட உள்ளது. மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி மே 28ஆம் தேதி ஜிஎஸ்டி அமைப்பின் 43வது கூட்டம் வீடியோ கான்பிரென்ஸ் வாயிலாக 11 மணிக்கு நடை பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், இத்துறையின் மாநில அமைச்சரான அனுராக் தாக்கூர், மத்திய அரசின் பல முக்கியப் பிரிவின் தலைவர்கள் மற்றும் நாட்டின் அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ளது.
முதல் முறையாகத் தமிழ்நாட்டின் நிதியமைச்சரான பழனிவேல் தியாகராஜன் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார். தமிழ்நாட்டில் அதிகளவிலான நிதி நெருக்கடிகள் இருக்கும் வேளையில் பல முக்கியப் பணிகளை விரைவாகச் செய்து வரும் தியாகராஜன் அவர்களுக்கு இக்கூட்டம் மிக முக்கியமானதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில அரசுகள் கோவிட் வேக்சின், ஆக்சிஜன் சிலிண்டர், வென்டிலேட்டர், கான்சன்ட்ரேட்டர், மற்றும் உயிர் காக்கும் மருந்தாக விளங்கும் Remdesivir மீதான வரியைக் குறைக்க வேண்டும் எனத் தொடர்ந்து வேண்டுகோள் வைத்துள்ள வேளையில், இதற்கான முடிவுகள் இக்கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தடுப்பில் பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்கள், கருவிகள், மருந்துகள் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைக்க இதுவரை பஞ்சாப், சட்டீஸ்கர், டெல்லி, மேற்கு வங்காளம் ஆகிய 4 மாநில அரசுகள் மத்திய அரசிடம் கடிதம் வாயிலாகக் கோரிக்கை வைத்துள்ளது. 3 மாநிலங்கள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது.