அரசுக்கு கிடைத்து வருவாயினை உயர்த்தும் விதமாக சரக்கு மற்றும் சேவை வரியினை, 143 பொருட்களுக்கு உயர்த்துவதற்காக மாநில அரசுகளிடம் ஜிஎஸ்டி கவுன்சில் கருத்து கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜிஎஸ்டி கவுன்சிலின் இந்த வரி அதிகரிப்பு பட்டியலில் அப்பளம், கைக்கடிகாரங்கள், கலர் டிவி (31 இன்ச்-க்கு கீழ்) , பவர் பேங்க்ஸ், சூட்கேஸ்கள், கைப்பைகள், வால்நட், கஸ்டர்ட் பவுடர், ஆல்கஹால் அல்லாத பானங்கள், செராமிக் சிங்க், வாஷ் பேசின், கண்ணாடிகள், கண்ணாடி பிரேம்கள், தோல் ஆடைகள் உள்ளிட்ட பலவும் இந்த லிஸ்டில் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வளவு வரி அதிகரிப்பு?
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், மேற்கண்ட 143 பொருட்களில், 92% பொருட்கள், 18 சதவீதத்தில் இருந்து, 28 சதவீத ஸ்லாப்புக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இந்த லிஸ்டில் உள்ள பல பொருட்கள் 2019 பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாக நவம்பர் 2017 மற்றும் டிசம்பர் 2018ல் நடைபெற்ற கவுன்சில் கூட்டத்தில் வரி குறைப்பு முடிவுக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
என்னென்ன பொருட்கள்?
குறிப்பாக வாசனை திரவியங்கள், தோல் ஆடைகள், பட்டாசுகள், கோகோ பவுடர், பட்டாசுகள், பிளாஸ்டிக்கின் தரை உரைகள், விளக்குகள், ஓலிப்பதிவு கருவிகள் போன்ற பல பொருட்களின் விலையானது, கடந்த நவம்பர் 2017ல் குறைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அப்பளம், வெல்லத்துக்கும் வரியா?
இதே கலர் டிவி மற்றும் மானிட்டர்கள், டிஜிட்டல் மற்றும் வீடியோ கேமராக்கள், பவர் பேங்க்ஸ் உள்ளிட்ட பலவற்றிற்கும் டிசம்பர் 2018ல் வரி குறைப்பு செய்யப்பட்டது.
இதே அப்பளம், வெல்லம் போன்ற பொருட்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் பூஜ்ஜியத்திலிருந்து % வரி ஸ்லாப்க்கு மாறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
18% டூ 28%
இதே தோல் ஆடைகள், அணிகலன்கள், கைகடிகாரங்கள், ரேஸர்கள், வாசனை திரவியங்கள், ஷேவ் செய்வதற்கு முன்/ஷேவ் செய்வதற்கு பின் தேவைப்படும் பொருட்கள், சாக்லேட்டுகள், வாஃபிள்ஸ், கோகோ பவுடர், மது அல்லாத பானங்கள், கைபைகள்/ஷாப்பிங் பேக்குகள். செராமிக் சிங்க், வாஷ் பேசின், பிளைவுட், கதவுகள், ஜன்னல்கள், மின் சாதனங்கள் (சுவிட்சுகள், சாக்கெட்ஸ்) ஆகியவற்றின் ஜிஎஸ்டி விகிதம் 18%ல் இருந்து 28% ஆக உயர்த்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
5% டூ 12% ஸ்லாப்
வால் நட் பருப்புகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 5%ல் இருந்து 12% ஆகவும், கஸ்டர்ட் பவுடருக்கு 5%ல் இருந்து 18% ஆகவும், மேஜை மற்றும் சமையலறைப் பொருட்களுக்கு 12%ல் இருந்து 18% ஆகவும் அதிகரிக்கப்படலாம்.
வருவாய் இழப்பு
2017 இல் கவுகாத்தி கூட்டத்தில், 28% ஸ்லாப்பில் 50 பொருட்கள் மட்டுமே தக்கவைக்கப்பட்டது. 228 பொருட்கள் பட்டியலில் இருந்து 178 பொருட்கள், உணவகங்களுக்கான கட்டணக் குறைப்புடன் 75% குறைக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளின் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரூ.70,000 கோடி இழப்பு
2017 கூட்டத்திற்கு பிறகு ஒர் ஆண்டிற்குள், ஒவ்வொரு நான்கு பொருட்களுக்கும் ஒரு விலையைக் குறைத்தது. ஜிஎஸ்டியின் கீழ் பூஜ்யம், 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய 5 வகைகளில், மொத்தமுள்ள 1,211 பொருட்களில், 350க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான கட்டணத்தை குறைத்தது. இதன் மூலம் அரசுக்கு ஒரு ஆண்டிற்கு 70,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
சாமானியர்கள் பாதிப்பு?
மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் அதிகபட்சமாக ரூ.1.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது பிப்ரவரி விற்பனையுடன் ஒப்பிடும்போது மார்ச் 2021ல் 14.7% அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ஜிஎஸ்டி விகிதம் மீண்டும் அதிகரிக்கப்பட்டால், மீண்டும் வரி வருவாயானது அதிகரிக்கும். எனினும் நடுத்தர மக்கள் மேற்கண்ட பொருட்களுக்கு கூடுதலாக செலவிடும் நிலைக்கு தள்ளப்படலாம். மொத்தத்தில் ஏற்கனவே பல பொருட்களின் விலை அதிகரிப்பால் திணறி மக்கள், வரி விகிதம் அதிகரித்தால், இன்னும் கூடுதலாக செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.