பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று லக்னோவில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
குறிப்பாக கொரோனாவினால் மக்கள் சிக்கித் தவித்து வரும் நிலையில், மருத்துவ துறைக்கு ஜிஎஸ்டியில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டது.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு சலுகைகள் செப்டம்பர் 30ம் தேதி அன்று முடிவடையவுள்ளது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு செய்யப்பட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் கேன்சருக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரி விகிதம் 12%ல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உண்மையில் கேன்சரால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். இது கேன்சர் மருந்துகள் விலையினை இன்னும் குறைவானதாக மாற்றும்.
இதோடு கொரோனாவுக்கு பயன்படுத்தப்படாத மருந்துகளான, Amphotericin B, Tocilizumab ஆகிய இரு மருந்துகளுக்கு டிசம்பர் 31 வரையில், ஜிஎஸ்டி விகிதம் 0% ஆக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தவிர கொரோனா காலத்தில் தளர்வு அளிக்கப்பட்ட வரி அனைத்தும் மருந்து பொருட்களுக்கு மட்டுமே, மருத்துவ உபகரணங்களுக்கு இல்லை எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இது தவிர விமான போக்குவரத்து சேவை நிறுவனங்கள், வெளி நாட்டில் இருந்து குத்தகைக்கு வாங்கும் விமானங்களுக்கு ஐஜிஎஸ்டி வரி விலக்கு, ரயில்வே துறையில் லோகோமோட்டீவ் பிரிவுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 18% அதிகரிக்கப்பட்டும் உள்ளது.
எனினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவது குறித்து முக்கிய அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஏமாற்றம் தரும் விதமாக அப்படியான அறிவிப்பு ஏதும் வரவில்லை. மாறாக பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதற்கான சரியான நேரம் இதுவல்ல என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். இது சற்றே ஏமாற்றித்தினை தரும் அறிவிப்பு எனலாம்.
இதனால் பெட்ரோல், டீசல் விலையில் பெரியளவில் மாற்றம் காண வாய்ப்பில்லை எனலாம். குறிப்பாக விலை பெரியளவில் குறைய வாய்ப்பில்லை எனலாம். எப்படியிருப்பினும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி குறைப்பு சற்று ஆறுதல் கொடுக்கும் விதமாக உள்ளது.