டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று துவங்கியுள்ளது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்களும், நிதியமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.
அடுத்தச் சில வாரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
பட்ஜெட் எதிரொலி
மத்திய அரசும், மத்திய நிதியமைச்சகமும் பட்ஜெட் தயாரிப்பதற்கான பணிகளை ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், வியாழக்கிழமை மாநிலங்களின் நிதியமைச்சர்கள் உடனான முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் 5 மாநில தேர்தலுக்கு முன்பாக வரும் காரணத்தால் மிகவும் முக்கியமானதாகவும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய பட்ஜெட் ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
மேலும் இன்று நடக்கும் முக்கியமான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆடை மற்றும் காலணி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை தற்காலிகமாகத் தடை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 1000 ரூபாய்க்கு அதிகமாக ஆடை மற்றும் காலணிகள் மீது இருந்த 5 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது, இத மக்கள் மத்தியில் மட்டும் அல்லாமல் நிறுவனங்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு வெளியாகியுள்ளது.
5 மாநில தேர்தல்
இந்தச் சூழ்நிலையில் பிப்ரவரி மார்ச் மாதத்தில் கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலத்தில் தேர்தல் நடக்க உள்ள காரணத்தால் ஆடை மற்றும் காலாணி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வைத் தற்காலிகமாகத் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது. இன்று நடக்கும் 46வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்து மருத்துவப் பொருட்கள் மீதான வரித் தளர்வு காலத்தை நீட்டிக்க வாய்ப்பு உள்ளது.
ஜஎஸ்டி வரி வசூலை
இதேபோல் ஜஎஸ்டி வரி வசூலை அதிகரிக்கப் புதிய மாற்றங்களையும் அறிவிக்க வாய்ப்பு உள்ளது, ஆனால் தேர்தல் காரணமாக வரி உயர்வை எதிர்பார்க்க முடியாது. மேலும் இந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் மாநில அரசுக்கான ஜிஎஸ்டி வரி பங்கீட்டு பிரச்சனையைத் தீர்க்கப்பட்டும் வாய்ப்பு உள்ளது, இதற்கான முக்கிய அறிவிப்புப் பட்ஜெட் கூட்டத்திலும் எதிர்பார்க்க முடியும்.