இந்தியாவில் மறைமுக வரி விதிப்பை மொத்தமாக மாற்றிவிட்டு ஜஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில், நாடு முழுவதும் பல வழிகளில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டு வருவதை வருமான வரித்துறை கண்டுபிடித்து வருகிறது. சமீபத்தில் பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருமான வரித்துறை பல இடத்தில் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட முக்கியமான கேள்விக்கு ஜிஎஸ்டி அமைப்புப் பதில் அளித்துள்ளது.
வரி ஏய்ப்பு
2017ஆம் ஆண்டில் இருந்து மற்றும் அதற்கு முந்தைய காலத்தில் ஜிஎஸ்டி, கலால் வரி, சேவை வரியில் சுமார் 93,375 கோடி ரூபாய் அளவிலான வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என மத்திய அரசு சார்பில் ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி
ஜிஎஸ்டி வரி அமலாக்கம் செய்யப்பட்ட பின்பு அதிகப்படியான வரி ஏய்ப்புச் செய்யப்படுவதாகக் கூறப்படும் நிலையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குனரகம் டெல்லி, மும்பை, புனே, அகமதாபாத், சண்டிகர் என நாட்டின் பல பகுதிகளில் இருக்கும் அலுவலகத்தின் வாயிலாக அவ்வப்போது அதிரடி சோதனை செய்து வருகிறது.
93,375 கோடி ரூபாய்
இந்தச் சோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட தரவுகளை வைத்து தான் தற்போது ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ளது. இந்த 93,375 கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்கு சுமார் 7,000 நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் இந்த மோசடிகள் 2011 முதல் 2021 வரையில் நடந்துள்ளதாகத் தெரிகிறது.
ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம்
இதில் டெல்லியில் இருக்கும் ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரக அலுவலகம் மட்டும் கடந்த 6 வருடத்தில் சுமார் 9,359 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளது என ஜனவரி 9ஆம் தேதி ஆர்டிஐ-யின் கேள்விக்குப் பதில் அளித்திருந்தது.
போலி ஜிஎஸ்டி பில்
ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் மற்றும் மத்திய நிதியமைச்சகம் வரி ஏய்ப்பை தடுக்கத் தற்போது பல விதமான கட்டுப்பாடுகளையும், கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளது. குறிப்பாகப் போலி ஜிஎஸ்டி பில் தயாரிக்கும் பல மோசடி அமைப்புகளையும், நிறுவனங்களையும் ஜிஎஸ்டி அமைப்பின் சோதனையில் மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.