ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதற்கான மென்பொருளில் செவ்வாய்க்கிழமை தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் வரி தாக்கல் செய்பவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியது. எனவே ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய மறைமுக வரிகள் ஆணையம் நீட்டித்து அறிவித்துள்ளது.
இந்தியாவில் 2017-ம் ஆண்டு ஜூலை முதல் வாட் வரி முறை நீக்கப்பட்டு, ஒரே நாடு ஒரே வரி முறை என்ற முழக்கத்துடன் ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை) வரி அமலுக்கு வந்தது. அதற்கான மென்பொருளை இன்போசிஸ் நிறுவனம் உருவாக்கியது.
ஜிஎஸ்டி அமலான பிறகு இன்போசிஸ் தயாரித்த ஜிஎஸ்டிஎன் மென்பொருளில் ஒவ்வொரு மாதமும் வரி தாக்கல் செய்யும் போது பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு வந்தது. இப்போது ஜிஎஸ்டி அமலாகி 5 ஆண்டுகள் நிறைவாக உள்ள நிலையில் தொழில்நுட்ப கோளாறு மட்டும் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப கோளாறு
ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர் - 2பி மற்றும் ஜிஎஸ்டிஆர் - 3பி படிவத்தைத் தாக்கல் செய்ய மே 20-ம் தேதி காலக்கெடு. ஆனால் அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வணிகர்களால் அதை சரியான நேரத்தில் தாக்கல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க ஆணையம்
ஜிஎஸ்டிஎன் மென்பொருளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க ஆணையம் சிபிஐசி, ஜிஎஸ்டிஎன் மென்பொருளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் குழு ஜிஎஸ்டிஆர்-2பி, ஜிஎஸ்டிஆர்-3பி படிவ சேவையை விரைவில் சரிசெய்வதற்கும் பணியாற்றி வருகிறது என தெரிவித்தது.
காலக்கெடு நீட்டிப்பு
ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர் - 3பி படிவத்தைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மே 20ம்-தேதியாக இருந்தது. இப்போது அதை மே 24-ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளனர்.
உத்தரவு
ஜிஎஸ்டிஎன் மென்பொருளில் ஏற்பட்டுள்ள இந்த தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய இன்போசிஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், வரி செலுத்துவோருக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம் எனவும் சிபிஐசி தெரிவித்துள்ளது.
வருமான வரி இணையதளம்
ஜிஎஸ்டி மட்டுமல்லாமல் இன்போசிஸ் நிறுவனம் அண்மையில் உருவாக்கிய புதிய வருமான வரி தாக்கல் இணையதளத்திலும் அவ்வப்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வரி தாக்கல் செய்பவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஜிஎஸ்டி மென்பொருள் உருவாக்கச் செய்யப்பட்ட செலவு எவ்வளவு?
ஜிஎஸ்டி மென்பொருளை உருவாக்க இன்போசிஸ் நிறுவனம் 1,350 கோடி ரூபாய் கட்டணமாகப் பெற்றது. ஆனால் மென்பொருள் உருவாக்கப்பட்டு 5 வருடங்களான பிறகு ஜிஎஸ்டி மென்பொருளில் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.
ஜிஎஸ்டிஆர்-3பி படிவம்
ஜிஎஸ்டி கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வரி செலுத்துவோர்களும் இதைத் தாக்கல் செய்ய வேண்டும். இதில் வெளிப்புற விநியோகங்கள், உள்ளீட்டு வரிக் கடன், வரிப் பொறுப்பு மற்றும் செலுத்தப்பட்ட வரிகள் பற்றிய சுருக்கமான விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்.