பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்து அதிகப்படியான விலையை குறைத்த போது மக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்தனர். தற்போது அரசுக்கு கூடுதல் வரி வருமானத்தை பெற்று தரும் வகையில் ஜிஎஸ்டி பிட்மென்ட் கமிட்டி முக்கியமான பரிந்துரையை நிதியமைச்சகத்தின் முன் வைத்துள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் அதிகப்படியான பிரச்சனைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும், அந்த வகையில் இதை சரி செய்யவும், வரிகளை இணைக்கும் முக்கிய பணியை மத்திய நிதியமைச்சகம் மற்றும் மத்திய அரசு இணைந்து ஜிஎஸ்டி பிட்மென்ட் கமிட்டி-க்கு கொடுத்தது.
ஜிஎஸ்டி பிட்மென்ட் கமிட்டி
ஜிஎஸ்டி பிட்மென்ட் கமிட்டி தற்போது 5 சதவீத ஜிஎஸ்டி வரியை 7 சதவீதமாகவும், 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 20 சதவீதமாக உயர்த்தவும், 12 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை இணைத்து 17 சதவீதம் என்ற புதிய ஜிஎஸ்டி வரி பலகையை கொண்டு வரவும் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி வரி
இதுமட்டும் அல்லாமல் இழப்பீடு விகிதத்தை 1 சதவீதத்தில் இருந்து 1.5 சதவீதம் வரையில் உயர்த்த முடிவு செய்துள்ளது, மேலும் தங்கம் மற்றும் வெள்ளி மீதான ஜிஎஸ்டி வரியை 3 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தவும் பரிந்துரை செய்துள்ளது ஜிஎஸ்டி பிட்மென்ட் கமிட்டி.
ஜிஎஸ்டி கவுன்சில்
ஜிஎஸ்டி வரி பலகை மற்றும் ஜிஎஸ்டி வரி இணைப்பு ஆகியவற்றை குறித்து ஜிஎஸ்டி பிட்மென்ட் கமிட்டி கொடுத்த பரிந்துரையை ஆய்வு செய்து ஜிஎஸ்டி கவுன்சில் உருவாக்கிய அமைச்சர்கள் குழு (GoMs) ஆய்வு மற்றும் ஆலோசனை செய்து அறிக்கையை ஜிஎஸ்டி அமைப்பிடம் கொடுக்க உள்ளது.
நவம்பர் 27 ஆய்வு கூட்டம்
ஜிஎஸ்டி பிட்மென்ட் கமிட்டி கொடுத்த பரிந்துரையை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு (GoMs) வருகிற நவம்பர் 27ஆம் தேதி கூட உள்ளது, மேலும் ஜிஎஸ்டி கவுன்சில்-ன் அடுத்த கூட்டம் டிசம்பர் மாதம் நடக்க உள்ளது. தற்போது செய்யப்படும் வரி மாற்றங்கள் அனைத்தும் வரி ஏய்ப்பை தடுக்கவும் அதேவேளையில் அரசுக்கு கூடுதலான வருமானத்தை ஈர்க்கவும் தான்.