மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோ-வில் செப்டம்பர் 17ஆம் தேதி நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் காலணிகள் மற்றும் ஆடைகள் மீதான ஜிஎஸ்டி வரி மறு சீரமைப்புச் செய்யப்பட்டது. 5 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரி 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இதன் மூலம் ஜனவரி 1, 2022 முதல் 1000 ரூபாய்க்கு குறைவான ஆடை மற்றும் காலணி மீது இருந்த ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா தொற்று அலையின் போது ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பும், இதைச் சமாளிக்க மத்திய அரசு செய்த அதிகப்படியான செலவுகள் மத்திய மாநில அரசின் வருவாய் மற்றும் நிதி நிலைமை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
வரி வருமானம் பாதிப்பு
இதற்கிடையில் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மீட்டு எடுக்க மத்திய அரசுக்கு அதிக வரி வருமானத்தை ஈட்டி தரும் பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த வரி வருமான பாதிப்பை சமாளிக்கப் பல பொருட்கள் மீதான வரியை உயர்த்தி அதன் மூலம் வரி வருமான பாதிப்பைச் சமாளிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
3 லட்சம் கோடி ரூபாய் இலக்கு
இதற்காக மத்திய அரசின் கீழ் இயங்கும் வரி கமிட்டி வருடத்திற்கு 3 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வரி வருவாயை ஈட்ட வேண்டும் என்ற முக்கியமான இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.
வரி உயர்வு
இதன் அடிப்படையில் முதல்கட்டமாக 1000 ரூபாய்க்கு கீழ் இருக்கும் ஆடைகள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது, இதேபோல் பிற ஃபேப்ரிக் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த வரி உயர்வால் டெக்ஸ்டைல் மற்றும் கைத்தறி துறைக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்.
பாதிப்புகள்
- இந்த வரி உயர்வு 85% டெக்ஸ்டைல் துறை நிறுவனங்களையும், 80 சதவீத முடிக்கப்பட்ட பொருட்களின் வர்த்தகமும் பாதிக்கப்படும்.
- ஜிஎஸ்டி வரி உயர்வால் ஏற்படும் வர்த்தகப் பாதிப்பு மூலம் 15 லட்சம் பேர் பணியாற்றும் துறையில் வேலைவாய்ப்பு இழப்பு அதிகரிக்கும்
- 80 சதவீத ஃபேப்ரிக் உற்பத்தி வகைப்படுத்தப்படாத துறையில் இருக்கும் நிலையில், ஃபேப்ரிக் மீதான 12 சதவீத வரி பவர் லூம் மற்றும் ஹேண்ட்லூம் நெசவாளர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள்.
- உற்பத்தி பொருட்களின் விலை உயர்ந்துள்ள காரணத்தால் ஆடைகளின் விலை 15 -20 சதவீதம் வரையில் அதிகரிக்க உள்ள நிலையில் 1000 ரூபாய்க்கு குறைவான அடைகளின் மீதான 12 சதவீத வரி ஆடை வர்த்தகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்
- 2021ஆம் ஆண்டில் மட்டும் சுமார் காட்டன் விலை சுமார் 70 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது. இதேபோல் போக்குவரத்து செலவுகளும் அதிகரித்துள்ளது.