இந்தியாவில் வரி ஏய்ப்பு அளவு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் ஜிஎஸ்டி அமைப்பு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது.
ஜிஎஸ்டி அமைப்புத் தற்போது துறை வாரியாக வரி ஏய்ப்புச் செய்யப்படும் ஓட்டைகளை அடைத்தும் வருகிறது, இதனால் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி வசூல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஜிஎஸ்டி அமைப்பின் நடவடிக்கைகள் பலன் அளிக்கும் நிலையில் இந்தக் கண்காணிப்பு, சோதனை, ஆய்வுப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த வகையில் ஜிஎஸ்டி கவுன்சில் தற்போது பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களைக் குறிவைத்து நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கியுள்ளது.
வரி ஏய்ப்பு
வரி ஏய்ப்புகளைத் தடுக்க வேண்டும் என்பதற்காக ஜிஎஸ்டி அமைப்பு பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்குக் கூடுதலான ஆய்வு மற்றும் தணிக்கை நடவடிக்கைகளை எடுக்க உள்ளது. இந்த அதிரடி நடவடிக்கைக்கு முக்கியமான ஒரு காரணமும் உண்டு.
பான் மசாலா, குட்கா நிறுவனங்கள்
அதாவது பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களின் உற்பத்தி அளவுகள் அடிப்படையில் ஜிஎஸ்டி வரி விதிக்க முயற்சியை மேற்கொண்டு உள்ளது. தற்போது உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மீது தான் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதை மாற்றி அமைக்க ஜிஎஸ்டி அமைப்பு திட்டமிட்டு வருகிறது.
நிரஞ்சன் பூஜாரி
மே 2021ல் ஒடிசா நிதியமைச்சர் நிரஞ்சன் பூஜாரி தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சர்கள் குழு பான் மசாலா மற்றும் குட்கா மீது விதிக்கப்படும் வரி தொடர்பாக ஆய்வு செய்தபோது வரி ஏய்ப்புகளைத் தடுக்க வேண்டும் என்பதற்காக முக்கியத் திட்டம் முன்வைக்கப்பட்டது.
உற்பத்தி திறன் அளவு
ஒடிசா நிதியமைச்சர் நிரஞ்சன் பூஜாரி தலைமையிலான அமைச்சர்கள் குழு பரிந்துரை படி பான் மசாலா மற்றும் குட்கா உற்பத்தி மீது வரி விதிப்பதை விடவும், பான் மசாலா மற்றும் குட்கா தயாரிக்கும் நிறுவனங்களின் உற்பத்தித் திறன் அளவு அடிப்படையில் வரி விதித்தால் வரி ஏய்ப்பை தடுக்க முடியும் என யோசனையை முன்வைத்தது.
ஜிஎஸ்டி வரி வசூல்
2017 ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட நாளில் இருந்து பான் மசாலா மற்றும் குட்கா தயாரிப்புத் துறையில் இருந்து ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து குறைந்தது. இதைச் சரி செய்யத் தான் நிரஞ்சன் பூஜாரி தலைமையிலான அமைச்சர்கள் குழு ஆய்வுகளைத் தொடர்ந்தது.
வரி விதிப்பு அளவுகள்
பான் மசாலா மற்றும் குட்கா தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி அளவு குறைத்து கணக்குக் காட்டி அதிகப்படியான வரி ஏய்ப்பு செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது புகையிலை பொருட்கள் மீது 290 சதவீத வரியும், பான் மசாலா பொருட்கள் மீது 135 சதவீத வரியும் விதிக்கப்படுகிறது.