சமீபத்தில் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி திருத்தி அமைக்கப்பட்டதாக முடிவு செய்யப்பட்டது.
இதன் காரணமாக ஜூலை 18 முதல் அதாவது இன்று முதல் ஒரு சில பொருள்களின் விலை உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் காரணமாக என்னென்ன பொருட்களின் விலை உயர்கிறது மற்றும் குறைகிறது என்ற விவரங்களை தற்போது பார்ப்போம்.
ஹோட்டல் அறை வாடகை
ஹோட்டல் அறையின் வாடகை நாளொன்றுக்கு ரூ.1000க்கும் குறைவாக இருந்தால் இதுவரை 15 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே ஹோட்டல் அறை வாடகை இன்று முதல் உயரும் வாய்ப்பு உள்ளது.
மருத்துவமனை அறை வாடகை
தீவிர சிகிச்சைப் பிரிவு தவிர மருத்துவமனையின் அறை வாடகை ஒரு நோயாளிக்கு நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்துக்கும் மேல் இருந்தால் 5 சதவீத ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வர உள்ளது. எனவே மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும் நோயாளிகளுக்கு இன்று முதல் கூடுதல் ஷாக் ஆகும்.
எல்இடி விளக்குகள்
மேலும் எல்இடி விளக்குகள் விளக்குகள், விளக்குகள் சம்பந்தப்பட்ட சாதனங்கள் ஆகியவற்றுக்கு இதுவரை 15 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் 18 சதவீதமாக உயர்ந்துள்ளதால் விளக்கு வாங்குபவர்களின் பர்ஸ் பதம் பார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்திகளுக்கும் வரி உயர்வு
காகித கத்திகள், வெட்டும் கத்திகள், பென்சில் ஷார்பனர்கள் மற்றும் பிளேடுகள் கொண்ட கத்திகள், கரண்டிகள், ஃபோர்க்ஸ், லேடில்ஸ், ஸ்கிம்மர்கள், கேக்-சர்வர்கள் ஆகிய பொருட்களுக்கு இதுவரை 12% மட்டுமே ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் 18 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வங்கி காசோலைக்கும் ஜிஎஸ்டி
காசோலைகள் உள்பட வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கும் 18% வரி விதிக்கப்படும் என ஜிஎஸ்ட் கவுன்சில் தெரிவித்துள்ளது. எனவே இன்று முதல் வங்கி வாடிக்கையாளர்களின் பேலன்ஸ் அவ்வப்போது குறையும்.
தயிர் மோர் பால்
மேலும் அட்லஸ்கள் உள்ளிட்ட வரைபடங்கள் மற்றும் வரைபடங்களுக்கு இன்று முதல் 12 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தயிர், லஸ்ஸி மற்றும் மோர் பால் ஆகியவை பேக்கேஜ் செய்யப்பட்டு இருந்தால் அந்த பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்த பொருட்களுக்கு இதற்கு முன் ஜிஎஸ்டி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாடகை சரக்கு வண்டி
மேலும் சரக்கு வண்டி வாடகைக்கு எடுத்தால் இதுவரை 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் அது 12 சதவிகிதமாக குறைக்கப்படுவதால் சரக்கு வண்டியின் வாடகை குறையும் வாய்ப்பு உள்ளது என்பது வாடகை வண்டி எடுப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி ஆகும்.
எலும்பு முறிவு உபகரணங்கள்
அதேபோல் எலும்பு முறிவு உபகரணங்கள், உடலில் பொருத்தப்படும் செயற்கை பாகங்கள், உடல் குறைபாடு காரணமாக அணியும் உபகரணங்கள், உள்விழி லென்ஸ் ஆகிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதங்கள் இதுவரை 12 சதவீதமாக இருந்த நிலையில் இன்று முதல் அது 5 சதவீதமாக குறைகிறது. எனவே இவற்றின் விலை இன்று முதல் குறைய வாய்ப்புள்ளது.