ஜிஎஸ்டி இழப்பீட்டுக்காக மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை, மத்திய அரசே ரூ.1.1 லட்சம் கோடி கடனாக வாங்க முடிவெடுத்துள்ளது.
முன்னதாக ஜிஎஸ்டி இழப்பீட்டுக்காக மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை, மாநிலங்கள் கடன் மற்றும் சந்தை மூலம் திரட்டிக் கொள்ள வேண்டும் என்றும் யோசனை கூறியது.
இந்த நிலையில் தான் மத்திய அரசே, மாநிலங்களுக்காக கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த மாற்றத்தினால், மத்திய மாநில அரசுகளுக்கு இடையே நிலவி வந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநில அரசுகளுக்கு ஒரு கடிதத்தினை எழுதியுள்ளார். அதில் மாநில அரசுகளின் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதோடு வாங்கும் கடன் அதன் நிதிப் பற்றாக்குறையில் சேராது. ஆனால் அதே சமயம் மாநில அரசுகளின் மூலதன வரவு கணக்கு சேரும் என்று மத்திய நிதி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. நடப்பு ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியில் தேக்கம் அடைந்தது. இந்த நிலையில் மாநில அரசுகளுக்கு இழப்பீடு வழங்க முடியாத நிலை இருந்து வந்தது. மாநில அரசுகள் இழப்பு குறைவை ஈடுகட்ட சந்தையில் நேரடியாக கடன் வாங்கலாம் என்றும், அதற்கு ரிசர்வ் வங்கி மூலமாக மத்திய அரசு உதவி செய்யும் என்றும் திட்டமிடப்பட்டது.
ஆனால் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் சிஎஸ்சி வருமானக் குறைவு மாநிலங்களுக்கு ஈடு செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு. எனவே இப்பொழுது மத்திய அரசு கடன் வாங்கி மாநிலங்களுக்கு அந்த தொகையை வழங்க வேண்டும் என்று அந்த மாநிலங்கள் வாதிட்டன. ஏற்கனவே மாநில அரசுகள் கொரோனாவால் நிதி நெருக்கடியில் நிதி நிலையில் தவித்துக் கொண்டுள்ளன.
இந்த நிலையில் மேலும் சந்தையில் கடன் வாங்குவது கடன்சுமை அதிகரிக்க உதவும். அதோடு மாநிலங்களுக்கு பொருளாதாரரீதியாக பயன்படாது என்றும் வாதிட்டன.
இதற்கிடையில் தான் தற்போது மத்திய அரசு தன் நிலையை மாற்றிக் கொண்டு, மாநிலங்களுக்கு இழப்பீடாக வழங்கப்படவேண்டிய 1.1 லட்சம் கோடி ரூபாயை கடனாக வாங்கி அப்படியே மாநில அரசுகளின் கணக்குக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. இந்தக் கடன் மத்திய அரசு கணக்கில் வராது மாநிலங்களுக்கு மூலதன கடன் கணக்கில் வரவாக அமையும்.
சந்தையில் வாங்கும் இந்த கடன் தொகையை செஸ் வரி வசூலிக்கும் காலத்தை நீட்டிப்பதன் மூலம் செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் இந்த மாற்றத்தினை பலரும் வரவேற்றுள்ளனர்.
மத்திய அரசின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், மத்திய அரசு தன் நிலையை மாற்றிக் கொண்டிருப்பதை வரவேற்பதாக கூறியுள்ளார்.