மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பை எளிமையாக்கவும், வரிப் பலகை எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிட்டு வரும் நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை மறுசீரமைக்கும் பணிகளை வருகிற மார்ச் மாதம் நடக்கும் ஜிஎஸ்டி கூட்டத்தில் செய்ய முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
இக்கூட்டத்தில் மத்திய அரசு நீண்ட காலமாக ஆலோசனை செய்து வரும் 12 மற்றும் 18 சதவீத வரி பலகையை ஒன்றாக இணைத்து ஸ்டாண்டர்ட் ரேட் கீழ் கொண்டு வரும் முயற்சிகளை மார்ச் மாத கூட்டத்தில் நிறைவேற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பட்ஜெட் அறிவிப்பில் வரி அளவீடுகள் குறித்து முக்கியமான அறிவிப்புகள் எதுவும் வெளியிடாத நிலையில் ஜிஎஸ்டி வரியில் தற்போது அறிவிக்கப்போகும் மாற்றம் சந்தையில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
மார்ச் மாதத்தில் நடக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், நீண்ட காலமாக ஆலோசனை செய்யப்பட்டு வரும் வரி இணைப்பும் மற்றும் வரிப் பலகை மறுசீரமைப்பு குறித்து ஜிஎஸ்டி குழு ஆலோசனை செய்து முக்கியமான முடிவுகளை எடுக்க உள்ளோம் என மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு
இந்தியாவில் தற்போது சரக்கு மற்றும் சேவை வரிப் பிரிவில் 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 பலகைகளில் வரி விதிக்கப்படுகிறது. இதைத் தாண்டி செஸ் வரிகள் விதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் ஆடம்பர பொருட்களுக்கு 28 சதவீத வரியைத் தாண்டி கூடுதலாகச் செஸ் வரியும் இருக்கிறது.
ஜிஎஸ்டி குறித்து விமர்சனம்
இந்த வரி அமைப்பு ஆரம்பம் முதல் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில் வரி இணைப்பு குறித்த முக்கிய மாற்றத்தை ஆலோசனை செய்யத் திட்டமிட்டுள்ளது ஜிஎஸ்டி குழு. குறிப்பாக வரி விதிப்பு முறை inverted duty structure-ஆக இருக்கிறது எனவும் விமர்சனம் எழுந்துள்ளது.
15வது பைனான்ஸ் கமிஷன்
சமீபத்தில் வெளியான 15வது பைனான்ஸ் கமிஷன் அறிக்கையில் கூட ஜிஎஸ்டி வரி விதிப்பில் 12 மற்றும் 18 சதவீத வரி பலகையை ஒன்றாக இணைக்கும் படி பரிந்துரை செய்யச் செய்யப்பட்டு உள்ளது. என்.கே சிங் தலைமையிலான குழு வெளியிட்டுள்ள 15வது பைனான்ஸ் கமிஷன் அறிக்கையில் ஜிஎஸ்டி 3 பலகை கொண்டு வரியாகவும், மெரிட் ரேட் ஆக 5 சதவீத வரியும், டீமெரிட் ரேட் ஆக 28-30 சதவீத வரியும் மறுசீரமைப்புச் செய்யப் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
வரி மறுசீரமைப்பு அவசியம்
மதிப்புக் கூட்டு வரி அமைப்பில் இருந்து ஜிஎஸ்டி வரி அமைப்பிற்கும் மாற்றம் செய்யும் பணியில் சராசரியாக revenue-neutral rate (RNR) 14 சதவீதம் இருக்க வேண்டும், ஆனால் தற்போது ஜிஎஸ்டி கீழ் effective tax rate 11.6 சதவீதமாக மட்டுமே உள்ளது. குறித்த அளவை விடவும் குறைவாக இருக்கும் நிலையில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் கட்டாயம் மறுசீரமைப்பு அவசியமானதாக உள்ளது.
முக்கியமான பிரச்சனை
ஆனால் தற்போது முக்கியமான பிரச்சனை ஜிஎஸ்டி வரி வருமானத்தை உயர்த்த திட்டமிடும் மத்திய அரசு 12 சதவீத வரியையும், 18 சதவீத வரியையும் இணைக்கத் திட்டமிடும் போது சராசரி அளவீடாக 15 சதவீதம் என்ற புதிய வரி விதிப்பை அறிவித்தால் சாமானியர்களுக்கு மிகப்பெரிய சுமையாக மாறிவிடும். இதேவேளையில் 18 சதவீத வரி பலகையை 12 சதவீதத்துடன் சேர்த்தால் சாமானிய மக்களுக்கு ஜாக்பாட் ஆக அமையும்.
ஜிஎஸ்டி வரி வசூல்
மேலும் ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த 4 மாதமாகத் தொடர்ந்து 1 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியிருக்கும் நிலையில் டிசம்பர் மாதம் 1.15 லட்சம் கோடி ரூபாய், ஜனவரி மாதம் 1.19 லட்சம் கோடி ரூபாய் எனத் தொடர்ந்து இரு மாதங்களாக வரி வசூல் சாதனையைப் படைத்து வருகிறது ஜிஎஸ்டி.