டெல்லி: இந்தியப் பொருளாதாரம், பாதாள லோகத்தைத் தாண்டி சரிவை சந்தித்துக் கொண்டு இருக்கிறது என்பதை அரசு அமைப்புகளான ஆர்பிஐ, மத்திய புள்ளியியல் அலுவலகங்களே சொல்லிக் கொண்டு இருக்கின்றன.
இந்தியாவின் ஜிடிபி இந்த 2019 - 20 நிதி ஆண்டுக்கு சுமாராக 5 சதவிகிதம் வளரலாம் என பல்வேறு தரகு நிறுவனங்களும் தங்கள் கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு நல்ல விஷயத்துக்கு அடித்தளம் போட்டு இருக்கிறார். கூடிய விரைவில் அந்த நல்ல விஷயத்தைச் சொல்வார் என எதிர்பார்க்கலாம்.
ஜிஎஸ்டி
கடந்த 2017-ம் ஆண்டு, இந்தியாவில் இருக்கும் அனைத்து மறைமுக வரிகளையும் காலி செய்து விட்டு ஒரே நாடு, ஒரே வரி என்கிற அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரியைக் கொண்டு வந்தார்கள். அந்த வரியைக் கொண்டு வந்ததில் இருந்து அரசுக்கு போதுமான மறைமுக வரி வருவாய்கள் வசூலாவதாகத் தெரியவில்லை. கடந்த பல மாதங்களாக அரசு நிர்ணயித்த ஜிஎஸ்டி வரி இலக்குகளைக் கூட அடைய முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது மத்திய அரசு.
எளிமைப் படுத்துவோம்
ஜிஎஸ்டி வரி அமைப்புகளை மேற்கொண்டு எளிமைப் படுத்துவதாகவும், நேர் செய்வதாகவும் உறுதி அளித்து இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இதை எந்த அளவுக்கு எளிமைப்படுத்த இருக்கிறார்கள் என்றால், ஒரு சாதாரண வர்த்தகர் கூட ஜிஎஸ்டி வரிச் சட்டங்களைக் கடைபிடித்து வரி செலுத்தும் அளவுக்கு எளிமைப்படுத்த இருக்கிறார்களாம்.
வேலை நடக்கிறது
மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய வருவாய்த் துறையின் செயலர் தலைமையில், இதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கிறதாம். அந்த கமிட்டி தான் ஜிஎஸ்டி வரி முறைகளை எளிமைப்படுத்துவது மற்றும் நேர் செய்யும் வேலையை ராப் பகலாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்களாம்.
மிக விரைவில்
எனவே கூடிய விரைவில், ஜிஎஸ்டி எளிமைப்படுத்தப்பட்டு விட்டது, இனி சாதாரண வியாபாரிகள் கூட எளிதில் ஜிஎஸ்டி வரி அமைப்புக்குள் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த வர்த்தகர்கள் நிம்மதியாக வந்து வரி செலுத்திவிட்டுப் போகலாம் என்கிற சந்தோஷமான அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என எதிர்பார்க்கலாம்.
வர்த்தகர்கள் தான் முதலில்
அரசாங்கத்துக்கு வரி வருவாயைக் கொண்டு வரும் வர்த்தகர்கள் சமூகத்தை, எந்த ஒரு நல்ல அரசாங்கமும் தொல்லை கொடுக்காது. அதே நேரத்தில் வர்த்தகர்கள் தங்கள் வியாபாரங்களை முறையாக அரசு அமைப்புகளுக்குள் கொண்டு வர வேண்டும். அதோடு வியாபாரத்தை புதுப்பிக்க வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர்.