இந்திய ஐடி நிறுவனங்கள் ஒருபக்கம் கொரோனா பாதிப்புக்களையும், மறுபக்கம் புதிய வெளிநாட்டு வர்த்தகத்தை ஈர்க்க முடியாமல் தவித்து வரும் இந்த வேளையில் பல நிறுவனங்கள் நிர்வாக ரீதியாகப் பல மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது.
மைண்ட்ட்ரீ நிறுவனர்கள் கையில் இருக்கும் 10 சதவீத பங்குகளையும் மொத்தமாக விற்பனை செய்து நிர்வாகத்தை விட்டு மொத்தமாக வெளியேற முடிவு செய்து வருகின்றனர். விப்ரோ நிறுவனத்தின் புதிய சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநராக Thierry Delaporte நியமனம் இப்படி அடுத்தடுத்த மாற்றங்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் தற்போது ஹெச்சிஎல் நிறுவனத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக விளங்கும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைவருமான ஷிவ் நாடார் நிர்வாகத் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஐடி நிறுவனங்களில் மிகமுக்கியமான ஒரு நிறுவனம் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ். 1976ஆம் ஆண்டு ஷிவ் நாடார் தலைமையில் 6 பேர் கொண்ட ஒரு அணி இந்நிறுவனத்தைத் துவங்கி இன்று 10க்கும் அதிகமான நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான (chairman) ஷிவ் நாடார் தனது பதவியில் இருந்து விலக உள்ளதாக அறிவித்துள்ளார்.
மகள் ரோஷினி
இந்நிலையில் ஷிவ் நாடார் பதவி தற்போது அவரது மகள் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா-க்கு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது ரோஷினி ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் non-executive director ஆக இருக்கிறார். தந்தையின் பதவி விலகல் மூலம் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர்கள் குழுவிற்குத் தலைமை பொறுப்புக்கு உயர்ந்துள்ளார் ரோஷினி.
இவரது பணி ஜூலை 17, 2020 முதல் துவங்க உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஷிவ் நாடார்
தலைவர் பதவியில் இருந்து விலகும் ஷிவ் நாடார், மொத்தமாக நிறுவனத்தை விட்டு வெளியேறவில்லை. ஹெச்சிஎல் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சியைக் கட்டமைக்கும் முக்கியமான பொறுப்பைக் கையில் எடுத்துள்ளார். ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகிய ஷிவ் நாடார், இந்நிறுவனத்தின் Chief Strategy Officer பொறுப்பேற்க உள்ளார்.
கொரோனா தாக்கம்
கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் நிறுவனங்களும் மற்றும் மக்களும் பல்வேறு விதமான பிரச்சனைகளைத் தினந்தோறும் சந்தித்து வருகின்றனர். இதனால் வர்த்தகப் பாதிப்பின் அளவு அதிகமாக உள்ளது. ஆனால் இந்தக் காலகட்டத்தை நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தேவையான மாற்றங்களைச் செய்யப் பயன்படுத்த உள்ளோம், இந்த மாற்றம் நிறுவன வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருக்கும் என நம்புகிறோம் என ஷிவ் நாடார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பங்கு நிலவரம்
இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் ஹெச்சிஎல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 0.94 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.
ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டு உடன் கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மொத்த லாப அளவீடு 7.3 சதவீதம் குறைந்து 2,925 கோடி ரூபாயாக உள்ளது. வருடாந்திர அடிப்படையில் இந்நிறுவனத்தின் லாபம் 31.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.