இந்தியாவின் முன்னணி வீட்டுக்கடன் சேவை நிறுவனமான ஹெச்டிஎப்சி, திங்கட்கிழமை தனது நிர்வாகக் குழு பல வருட ஆலோசனைக்குப் பின்பு ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைக்க ஒப்புதல் அளித்தது. இந்த முடிவைப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மிகவும் முக்கியமான அறிவிப்பாகப் பார்க்கப் பல காரணங்கள் உண்டு.
குறிப்பாக ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி இணைப்பு மூலம் சந்தையின் டாப் 10 நிறுவன பட்டியலில் மிக முக்கியமான மாற்றங்கள் உருவாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
ஹெச்டிஎப்சி
இந்திய நிதித் துறையில் மிக முக்கியமான இரு பெரு நிறுவனங்கள் இணையும் நிலையில் இக்கூட்டணியின் மொத்த சந்தை மதிப்பு பெரிய அளவில் மாற உள்ளது. ஹெச்டிஎப்சி நிறுவனம் இன்று 1.42 சதவீத சரிவுடன் 2,640.85 ரூபாயில் வர்த்தகம் செய்யப்படுகிறது. ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் இன்று 2.33 சதவீத சரிவுடன் 1618.20 ரூபாயில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
சந்தை மதிப்பு
இதன் மூலம் ஹெச்டிஎப்சி நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு 4,79,174 கோடி ரூபாயாக உள்ளது. இதேபோல் ஹெச்டிஎப்சி வங்கியின் மொத்த சந்தை மதிப்பு 8.97 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதன் மூலம் ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி கூட்டணி சந்தை மதிப்பு 13.76 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஐசிஐசிஐ, இன்போசிஸ்
ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி இணைப்பு மூலம் இந்தியாவின் அதிகச் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் ஹெச்டிஎப்சி கூட்டணி ஐசிஐசிஐ, இன்போசிஸ் ஆகிய நிறுவனங்களை ஓரம்கட்டுவது மட்டும் அல்லாமல் நீண்ட காலமாக முதல் மற்றும் 2வது இடத்தில் இருக்கும் டிசிஎஸ் நிறுவனத்தையும் பின்னுக்குத் தள்ள உள்ளது.
டிசிஎஸ் நிறுவனம்
டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலை இன்று 0.84 சதவீதம் அதிகரித்து 3,802.65 ரூபாயாக இருக்கும் நிலையில் இதன் சந்தை மதிப்பு 13.92 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதன் மூலம் ஹெச்டிஎப்சி கூட்டணி டிசிஎஸ்-ஐ நெருங்கியுள்ளது. இந்த நிலை எப்போது வேண்டுமானாலும் மாறலாம்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இதேபோல் முதல் இடத்தில் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வர்த்தகம் வேகமாக விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் தொடர்ந்து வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் 17.80 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட ரிலையன்ஸ் நிறுவனத்தை இன்போசிஸ் முந்துவது சற்றுக் கடினமாக இருந்தாலும் வாய்ப்புகள் உள்ளது.
ஹெச்டிஎப்சி வெற்றிப் பாதை
ஹெச்டிஎப்சி கூட்டணியின் இணைப்பிற்குப் பின்பு வங்கி சேவை மற்றும் வர்த்தகத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைய உள்ளது. இதன் மூலம் இந்திய நிதியியல் சேவையில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கத்தை ஹெச்டிஎப்சி நிறுவனத்தால் உருவாக்க முடியும். இது மற்ற வங்கிகளுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications