இந்தியாவினை சேர்ந்த முன்னணி நிதி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி, அதன் துணை நிறுவனமான ஹெச்டிஎஃப்சி கேப்பிட்டல் நிறுவனத்தின் 10% பங்குகளை, அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி-யிடம் விற்பனை செய்யவுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தத்தின் மதிப்பானது 184 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.
ஹெச்டிஎஃப்சி-யின் இந்த நிதி திரட்டலானது அதன் வணிகத்தினை மேம்படுத்தவும், டெக்னாலஜியினை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்கு விலை நிலவரம்
ஹெச்டிஎஃப்சி-யின் இந்த அறிவிப்பானது வெளியான நிலையில், இப்பங்கின் விலையானது நல்ல ஏற்றத்தினையும் கண்டுள்ளது. தற்போதும் கூட என் எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 1.20% அதிகரித்து, 2165.95 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவரையில் (2.16 மணியளவில்) இதன் உச்ச விலை 2183 ரூபாயாகும்.இதன் குறைந்தபட்ச விலை 2144 ரூபாயாகும்.
இதே பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 1.08% அதிகரித்து, 2162.10 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்ச விலை 2183.70 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 2145 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 3021.10 ரூபாயாகும். 52 வார குறைந்தபட்ச விலை 2046.30 ரூபாயாகும்.
ரியல் எஸ்டேட் நிறுவனம்
ஹெச் டி எஃப் சி கேப்பிட்டல் நிறுவனம் ஒரு தனியார் ஈக்விட்டி நிறுவனமாகும். இது ஹெச்டிஎஃப்சி-யின் முதலீட்டு மேலாளராக உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு சுமார் 22,800 கோடி ரூபாயாகும். 6 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது இந்த நிறுவனம் என ஹெச்டிஎஃப்சி-யின் தலைவர் தீபக் பரேக் கூறியுள்ளார்.
சர்வதேச முதலீட்டு தளம்
அபுதாபி நிறுவனத்தின் இந்த முதலீடானது, ஹெச்டிஎஃப்சி கேப்பிட்டலுக்கு சர்வதேச அளவிலான முதலீட்டாளர்களுக்கு முன்னணி முதலீட்டு தளமாக மாறுவதற்கும் ஊக்குவிக்கும். ஹெச்டிஎஃப்சி கேப்பிட்டல் நிர்வகிக்கும் நிதியானது, தற்போது மலிவு மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட வீட்டுத் திட்டங்களுக்கு போதுமான நிதியினை வழங்கும்.
முதலீடு
மேலும் கட்டுமானத் தொழில் நுட்பம், ஃபின்டெக் மற்றும் பலவற்றிலும் முதலீடு செய்யப்போவதாகவும் ஹெச்டிஎஃப்சி தெரிவித்துள்ளது.
ஹெச்டிஎஃப்சி கேப்பிட்டல் நிறுவனம் ஒரு மில்லியன் மலிவு விலை வீடுகளை உருவாக்கவும் இலக்கு வைத்துள்ளது.