மும்பை: ஹெச்டிஎப்சி வங்கி ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரின் ஃபிக்சட் டெபாசிட்டில் இருந்து 3 கோடி ரூபாய் பணத்தை திருடி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீனாட்சி கபூரியா என்ற 53 வயது பெண் மும்பையை சேர்ந்தவர். இவர் ஹெச்டிஎப்சி வங்கியில் ஃபிக்சட் டெபாசிட் கணக்கு தொடங்கி 3 கோடி ரூபாயை போட்டு வைத்துள்ளார். வங்கியில் அவரது ரிலேஷன்ஷிப் மேனேஜராக பணிபுரிந்து வந்த பாயல் கோத்தாரி என்ற 27 வயது பெண் அந்த பணத்தை தன்னுடைய கணக்கிற்கு மாற்றியுள்ளார். இது தொடர்பாக மீனாட்சி கபூரியா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்போது காவல்துறையினர் இந்த விவகாரத்தை பாயல் கோத்தாரியை கைது செய்யாமல் சமரசம் செய்ய முயன்றுள்ளனர். இதனை அடுத்து மீனாட்சி கபூரியா மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது தான் பாயல் கோத்தாரி செய்த முறைகேடுகள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்தது.
பாயல் கோத்தாரி மீனாட்சி கபூரியாவின் கணக்கில் மொபைல் நம்பர், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்டவற்றை மாற்றியுள்ளார். இதன் பின்னர் அவர் கணக்கில் இருந்து வேறொரு கணக்கிற்கு 3 கோடியை ரூபாய் மாற்றி பின்னர் அதில் இருந்து தன்னுடைய கணக்கிற்கு மாற்றியுள்ளார்.
இது மீனாட்சி கபூரியாவுக்கு தெரியாமல் இருக்க வேண்டும், பரிமாற்றம் குறித்த மெஸேஜ் அவருக்கு சென்று விட கூடாது என்பதற்காக முன்கூட்டியே மொபைல் எண்ணையும், மின்னஞ்சலையும் மாற்றியுள்ளார். இந்த வழக்கு நீதிமன்றம் வரை சென்றதை அடுத்து காவல்துறையினர் பாயல் கோத்தாரியை கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்திற்கு வந்த பிறகு தான் நீங்கள் கைது நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறீர்கள் என காவல்துறையினரின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக துணை காவல் ஆணையர் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.
அது மட்டும் இன்றி ஹெச்டிஎஃப்சி மற்றும் ரிசர்வ் வங்கி இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மக்கள் ஒரு வங்கியை நம்பி பணத்தை போடுகின்றனர் ஆனால் அந்த வங்கி அமைப்பில் இருக்கும் ஒரு நபரே அந்த பணத்தை திருடுகிறார் எனும் போது மக்கள் யார் மீது தான் நம்பிக்கை வைப்பது என நீதிபதிகள் அப்போது கேள்வி எழுப்பினர்.
இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள நீதிபதிகள் இந்த விவகாரத்தில் வங்கி நிர்வாகத்திற்கும் பங்களிப்பு இருக்கிறதா என்பது குறித்தும் வேறு யாரேனும் இதில் பங்கு கொண்டிருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
ஒரு வயதான பெண்மணி தன்னுடைய ஓய்வு காலத்திற்கான தொகையை ஒரு வங்கியை நம்பி போட்டு இருக்கிறார், ஆனால் வங்கி நிர்வாகம் அவரை ஏமாற்றி இருக்கிறது என தெரிவித்த நீதிபதிகள் டிசம்பர் 13-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர். இந்த வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications