அமெரிக்கா போகிற போக்கில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதி சுலைமானை தட்டிவிட்டார்கள். அது இன்று ஒரு மினி பொருளாதார சுனாமியாக உருவெடுக்கத் தொடங்கி இருக்கிறது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பதோடு, தங்கத்தின் விலையும் படு பயங்கரமாக அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை சுமார் 3,350 ரூபாய் அதிகரித்து இருக்கிறது.
இந்தியாவில் மேலும், தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்கிறார்கள் அனலிஸ்டுகள். இந்த காரணிகளில் மிக முக்கியமான காரணி அமெரிக்க டாலர். எப்படி அமெரிக்க டாலரால், தங்கம் விலை உயரும் என்பதைத் தான் பார்க்க இருக்கிறோம்.
உலக வர்த்தகம்
பொதுவாக, உலகில் எந்த நாடு, யாரிடம் இருந்து பொருளை வாங்கினாலும் சரி, விற்றாலும் சரி, அமெரிக்க டாலரில் தான் பணத்தை வாங்க வேண்டும், கொடுக்க வேண்டும். இந்த ஒரு காரணத்தால் தான், அமெரிக்க டாலர், உலகின் சக்தி வாய்ந்த கரன்ஸிகளில் ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கிறது. எப்போது உலக அளவில் பொருளாதார பிரச்சனைகள் வந்தாலும், டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின் கரன்ஸி மதிப்பு குறையத் தொடங்கிவிடும். அது தான் இந்தியாவுக்கும் நடந்து கொண்டிருக்கிறது.
டாலர் Vs தங்கம்
பொதுவாக, அமெரிக்க டாலரில் தான், இந்தியாவும் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இப்படி தொடர்ந்து குறைந்தால், அதிக ரூபாய் கொடுத்து டாலர் வாங்க வேண்டி இருக்கும். கடந்த ஜூலை 31, 2019 அன்று ஒரு டாலர் = 68.79 ரூபாயாக இருந்தது, இப்போது ஜனவரி 06, 2020 அன்று ஒரு டாலர் = 71.94 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. நமக்கு நஷ்டம். தங்கத்தின் விலை அதிகரிக்கும்.
உதாரணம் 1
கடந்த ஜூலை 31, 2019 அன்று, ஒரு டாலர் = 68.79 ரூபாய். 100 கிராம் தங்கத்தை 1000 டாலர் கொடுத்து வாங்குகிறோம் என வைத்துக் கொள்வோம். ஆக 1000 டாலரை =68,790 (68.79*1000) கொடுத்து வாங்குவோம். ஆக முதலில் 68,790 ரூபாய் கொடுத்து, 1000 அமெரிக்க டாலரை வாங்குவோம். அதன் பின் 1000 டாலரைக் கொடுத்து 100 கிராம் தங்கத்தை வாங்குவோம். ஆக ஒரு கிராம் தங்கத்தின் விலை 687 ரூபாய்.
உதாரணம் 2
ஜனவரி 06, 2020 அன்று, ஒரு டாலர் = 71.94 ரூபாய். அதே 100 கிராம் தங்கத்தை 1000 டாலர் கொடுத்து வாங்குகிறோம் என வைத்துக் கொள்வோம். ஆக 1000 டாலரை = 71,940 (71.94*1000) கொடுத்து வாங்குவோம். அதாவது 71,940 ரூபாய் கொடுத்து 100 கிராம் தங்கத்தை வாங்குவோம். ஆக ஒரு கிராம் தங்கத்தின் விலை 719 ரூபாய். ஆக 6 மாதத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை (719 - 687) 32 ரூபாய் அதிகரித்து விட்டது. இதற்கு முழு முதல் காரணம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு தான்.
மத்திய வங்கிகள்
தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள, ஆர்பிஐ போன்ற, பல நாட்டு மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கிக் குவித்துக் கொண்டே இருக்கிறார்களாம். சமீபத்திய உலக தங்க கவுன்சிலின் அறிக்கைப் படி கடந்த 2019-ம் ஆண்டில் தங்கத்தை வாங்கிக் குவித்து இருக்கிறார்களாம். ஆக மத்திய வங்கிகளும், டாலரைக் கொடுத்து தங்கத்தை வாங்கிக் குவிக்கிறார்கள் எனும் போது தங்கத்தின் விலை அதிகரிக்கத் தானே செய்யும். அது தான் இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கிறது.
தங்க விலை அதிகரிக்கலாம்
எனவே கூடிய விரைவில் இது போன்ற, பல உலக பொருளாதார காரணிகளால், குறிப்பாக அமெரிக்கா - ஈரானுக்கு மத்தியில் நிலவும் போர் சூழலாலும், தங்கத்தின் விலை ஏற்றம் காணும் என எதிர்பார்க்கலாம். போகிற போக்கைப் பார்த்தால், ஒரு வருட சம்பளத்தைக் கொடுத்தால் தான் 10 பவுன் தங்கத்தை வாங்கி திருமணம் செய்ய முடியும் போலிருக்கிறதே..!