தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் உணவு வணிகமாக ஷவர்மா ரெஸ்டாரண்ட்கள் உள்ளன. நெருப்பில் சுட்டு சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட சிக்கன், கொஞ்சம் மையோனஸ், முட்டை கோஸ், மசாலா இவற்றை எல்லாம் கலந்து ரோமாலி ரொட்டியை நெருப்பில் சுட்டு, அதில் சிக்கன் கலவையை வைத்து சுற்றித் தந்தால் அது தான் ஷவர்மா.
கடந்த சில வருடங்களாக இந்த ஷவர்மா கடைகள் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவி வருகிறது. அதன் சுவையும் பலரையும் விரும்பி சாப்பிட வைத்து வருகிறது.
கடந்த சில நாட்களாக ஷவர்மா சாப்பிட்டதால் பலருக்கு உடல நலப் பாதிப்பு ஏற்படுகிறது எனக் கடந்த சில நாட்களாகச் செய்திகள் வருவதால், தெரிந்த ஒரு ஷவர்மா கடை உரிமையாளரிடம் பேசினோம். அப்போது அவர் சொன்னவற்றை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
ஷவர்மா கடையை எப்போது ஆரம்பித்தீர்கள்?
கொரோனா ஊரடங்கு வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த கடையை ஆரம்பித்தேன். ஆரம்பித்த இரண்டு மாதத்தில் கொரோனா ஊரடங்கு வந்ததால் கடைகளை திறக்க முடியாமல் போனது. பின்னர் உணவகங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
வர்த்தக வளர்ச்சி
அப்போது ஐடி நிறுவன ஊழியர்கள் பலர் வீட்டிலிருந்து வேலை செய்துவந்ததால், மாலை நேரங்களில் வெளியில் வரும் அவர்கள் ஷவர்மாவை சாப்பிடுவது மட்டுமல்லாமல் குடும்பத்தினர் அனைவருக்கும் வாங்கி செல்ல ஆரம்பித்தார்கள். இப்போது கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் என பலர் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
பானி பூரி
பானி பூரி எப்படி ஒரு காலத்தில் மாலை நேரத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பொருளாக இருந்ததோ அப்படி, இன்று ஷவர்மாவும் மாறி வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
ஊரடங்கு காலத்தில் எப்படி செலவுகளைச் சமாளித்தீர்கள்?
கொரோனா முதல் அலை ஊரடங்கின் போது முதல் 3 மாதங்கள் கடை வாடகை, ஷவர்மா மாஸ்டர் சம்பளம் போன்றவை சிரமமாகத் தான் இருந்தது. ஆனால் இப்போது அதை எல்லாம் மறக்கும் அளவிற்கு லாபம் வருகிறது.
ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாகிறது?
தமிழ்நாட்டில் பெரும்பாலும் சிக்கன் ஷவர்மா கடைகள் தான். ஒரு நாளைக்கு 10 கிலோ போன் லெஸ் சிக்கனுக்கு 2,800 ஆகிறது. மயோனஸ் செய்ய எண்ணெய், பூண்டு, முட்டை என அதற்கு ஒரு 800 ரூபாய் செலவாகும். சிக்கனுடன் முட்டைகோஸை சிறு துண்டுகளாகச் சேர்ப்போம்.
அதற்குத் தினமும் 300 ரூபாய் செலவு. மசாலா 700 ரூபாய், ஒரு ரொட்டிக்கு 6*100 ரூபாய் = 600, மாஸ்டர் கூலி தினம் 500 ரூபாய் மற்றும் ரேப்பரர் பேப்பர், கேஸ், மின்சாரம் போன்றவற்றுக்கு 500 ரூபாய் எனத் தினமும் 3,000 ரூபாய் வரை செலவாகும். (100 ஷவர்மாக்கள் கிடைக்கும்)
எவ்வளவு லாபம் கிடைக்கும்?
ஒரு நாளைக்கு 150-ல் இருந்து 200 ஷவர்மாக்கள் வரை விற்கிறோம். அதற்கு ஏற்றவாறு மூலப்பொருட்கள் அளவு மாறும். 150 ஷவர்மா விற்றால் எல்லா செலவுகளும் போக தினம் குறைந்தது 1800 ரூபாய் லாபம் கிடைக்கும் என்றார்.
உடல் நல பாதிப்பு ஏற்படக் காரணம் என்ன?
பொதுவாக ஷவர்மாவுக்கு பயன்படுத்தப்படும் சிக்கன், குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுப்பதால் அதில் சில பேக்டீரியாக்கள் உண்டாகும். அவை சிக்கன் நன்றாக வேகும் போது இறந்துவிடும். ஆனால் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகம் என்பதற்காக வேக வேகமாக சிக்கனை வேகாமல் நறுக்கி ஷவர்மா செய்யும் போது அந்த பேக்டீரியாக்கள் உடல் நலக் கோளாறை ஏற்படுத்துகிறது என்றார்.
எனவே ஷவர்மா மாஸ்டர்கள் சிக்கனை நன்கு நெருப்பில் சுட்டு, அவற்றை நறுக்கிச் செய்யும் ஷவர்மாக்களை சாப்பிடும் போது உடல்நலக் குறைபாடுகள் ஏற்படாது என்கின்றனர்.