வதோதரா, குஜராத்: டிஜிட்டல் இந்தியாவின் பலனாக, இன்று ஒரு சில நிமிடங்களில், உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு நம் வங்கி வேலைகளை முடித்துக் கொள்கிறோம்.
இதில் சாதகங்களும் பாதகங்களூம் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. ஆன்லைனில் பணம் பறிக்கும் கும்பல் இப்போது பல ரூபத்தில் வந்து கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
சமீபத்தில் தான் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகள் போல, பல பேரிடம் திருடியதை செய்தியாகப் பார்த்தோம். ஜியோ பெயரில் ஆஃபர் கொடுப்பதாகச் சொல்வது, பரிசு கொடுப்பதாகச் சொல்வது, பணம் செலுத்தினால் அடுத்த சில மாதங்களில் இரண்டு மடங்கு பணம் தருவதாக சொல்வது என தினுசு தினுசாக நம்மிடம் இருந்தே நம் டெபிட் கார்ட், க்ரெடிட் கார்ட், நெட் பேங்கிங் விவரங்களை வாங்கி, நம் வங்கிக் கணக்கில் இருந்தே கொள்ளை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஐஏஎஸ் அதிகாரி
இந்த மாதிரியான மோசடி செய்யும் கும்பலின் வலையில் ஏழை எளிய மக்கள், படிக்காத பாமர மக்கள், மிஞ்சிப் போனால் நடுத்தர மக்கள் சிக்குவார்கள். ஆனால் இப்போது, இந்த மோசடி கும்பலிடம் சிக்கி சுமார் 95,000 ரூபாய் பணத்தை இழந்து இருப்பது, ஒரு பெரிய ஐஏஎஸ் அதிகாரி. எனவே இனி ஆன்லைன் மோசடிகளை காவல் துறையினர் கொஞ்சம் சீரியஸாகப் பார்ப்பார்கள் என நம்பலாம். சரி விஷயத்துக்கு வருவோம்.
பேடிஎம்
அந்த ஐஏஎஸ் அதிகாரியின் பெயர் பி கே கெரா. இவர் தற்போது Gujarat Alkalies and Chemicals என்கிற அரசு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரக பணியாற்றிக் கொண்டு இருக்கிறார். இவரிடம் தான் பேடிஎம் நிறுவனத்தின் கணக்குக்கு தேவையான கே வொய் சி விவரங்களை வாங்கி சேமிப்புக் கணக்கை தொடங்குவதாகச் சொல்லி 95,000 ரூபாயை ஆட்டை போட்டிருக்கிறது ஒரு ஆன்லைன் மோசடி கும்பல். எப்படி நடந்தது..?
என்ன நடந்தது
நம் அதிகாரிக்கு ஒரு எஸ் எம் எஸ் வந்திருக்கிறது. அதில் பேடிஎம் வேலட்டை முறையாகப் பயன்படுத்த தேவையான கேவொய்சி விவரங்களைச் சமர்பிக்கச் சொல்லி இருக்கிறது. அப்படி முறையாகச் சமர்பிக்க என்றால், விரைவில் பேடிஎம் வேலட்டை பயன்படுத்த முடியாமல் போய்விடும் எனச் சொல்லி இருக்கிறது அந்த எஸ் எம் எஸ்.
பேச்சு வார்த்தை
நம் ஐஏஎஸ் அதிகாரியும், தனக்கு எஸ் எம் எஸ் வந்த எண்ணுக்கு அழைத்துப் பேசி இருக்கிறார். அப்படியே பேசி அனைத்து கேவொய்சி தரவுகளையும் கொடுத்து இருக்கிறார். அதன் பிறகு ஒரு அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யச் சொல்லி இருக்கிறார்கள். எல்லாம் முடிந்த பிறகு பேடிஎம் கணக்கை லாக் அவுட் செய்து மீண்டும் லாக் இன் செய்யச் சொல்லி இருக்கிறார்கள். அப்படியே நைசாக பேடிஎம் சேமிப்புக் கணக்கை தொடங்குவது பற்றியும் கேட்டு இருக்கிறார்கள்.
பேடிஎம் சேமிப்புக் கணக்கு
பேடிஎம் பேமெண்ட் வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்கைத் தொடங்க நம் ஐஏஎஸ் அதிகாரியும் ஆர்வமாக எல்லா விவரங்களையும் கொடுத்து இருக்கிறார். கடைசியாக டெபிட் கார்ட் அல்லது க்ரெடிட் கார்ட் வழியாக 10 ரூபாய் பணப் பரிமாற்றம் செய்யச் சொல்லி இருக்கிறார்கள். நம் அதிகாரியும் தன்னுடைய சிட்டி பேங்க் க்ரெடிட் கார்ட் வழியாக பணத்தை அனுப்பி இருக்கிறார்.
திருட்டு
அடுத்த சில நிமிடம் கழித்து, சிட்டி பேங்கில் இருந்து 10 ரூபாய் பணப் பரிமாற்றம் செய்ததற்கு எஸ் எம் எஸ் வரும் என்று பார்த்தால், 45,000 ரூபாய் பணப் பரிமாற்றம் செய்ததாக எஸ் எம் எஸ் வந்து இருக்கிறது. அய்யய்யோ 45,000 பணம் போச்சா என வருத்தபடுவதற்குள், மீண்டும் 49,999 ரூபாய் பணப் பரிமாற்றம் செய்ததாக எஸ் எம் எஸ் வந்து இருக்கிறது.
வங்கி தரப்பு
உடனடியாக சிட்டி வங்கி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, தன்னுடைய 45,000 மற்றும் 49,999 ரூபாய் பணப் பரிமாற்றங்களை நிறுத்தச் சொல்லி இருக்கிறார். ஆனால் வங்கி அதிகாரிகளோ பணத்தை பரிமாற்றம் செய்துவிட்டதாகச் சொல்லி விட்டார்கள். கடைசியாக, ஒரு புகார் எழுதி, சைபர் க்ரைம் காவலர்களிடம் கொடுத்து இருக்கிறார். நம் இந்தியாவில் ஐஏஎஸ் அதிகாரிகளே ஆன்லைன் மோசடியில் ஏமாறும் போது, சாதாரண மக்கள் ஏமாற மாட்டார்களா என்ன..? அது தான் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.
உத்திரப் பிரதேசம்
காவலர்கள் விசாரித்த போது, நம் ஐஏஎஸ் அதிகாரிக்கு வந்த எஸ் எம் எஸ் உத்திரப் பிரதேசத்தில் இருந்து வந்து இருக்கிறது. அதோடு ஐஏஎஸ் அதிகாரியின் க்ரெடிட் கார்டில் இருந்து எடுக்கப்பட்ட பணம் இரண்டு வெவ்வேறு வங்கிக் கணக்கில் டெபாசிட் ஆகி இருக்கிறது. அந்த இரண்டு வங்கிக் கணக்குகளும் உத்திரப் பிரதேசத்தில் தான் இருக்கிறதாம். இந்த சம்பவம் எல்லாம் கடந்த ஆகஸ்ட் 2019-ல் நடந்து இருக்கிறது. ஆனால் இப்போது தான் செய்தி கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்திருக்கிறது.
உஷார் மக்களே
எனவே மக்களே... யார் வந்து உங்களிடம் பணப் பரிமாற்றம் செய்யச் சொன்னாலும், இது போல திருடர்களின் கேட்வேக்களில் க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட், நெட் பேங்கிங் வழியாக பணத்தை பரிமாற்றம் செய்துவிடாதீர்கள். அப்படி மீறிச் செய்துவிட்டீர்கள் என்றால்... ஐஏஎஸ் அதிகாரிக்கு நடந்தது போல வங்கிக் கணக்கில் இருக்கும் மொத்த பணமும் பறி போய்விடும். எனவே மக்களே எவ்வளவு உஷாராக இருக்க முடியுமோ அவ்வளவு உஷாராக இருங்கள்.