அமெரிக்க அதிபர் தேர்தல் எதிரொலியாக இந்த வாரம் முழுக்க சர்வதேச பங்குச்சந்தை மந்தமாக இருந்த நிலையில், புதன்கிழமை அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஜோ பிடன் என தோராயமாக உறுதி செய்யப்பட்டதன் எதிரொலியாக அமெரிக்க பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சாதகமாக திரும்பி சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்தது.
இதன் எதிரொலியாக வியாழக்கிழமை ஆசிய சந்தையில் அனைத்து சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்த நிலையில் மும்பை பங்குச்சந்தை அமெரிக்க அதிபர் தேர்தல் எதிரொலியுடன் பல்வேறு காரணங்களுக்காக அதிகளவிலான முதலீடுகளை பெற்று சிறப்பான வர்த்தகத்தை அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் சுமார் 750 புள்ளிகள் வரையில் உயர என்ன காரணம்..?
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
வியாழக்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் சுமார் 746 புள்ளிகள் வரையில் உயர்ந்து அதிகப்படியாக 41,370.91 புள்ளிகளை அடைந்தது. ஆனால் வர்த்தக முடிவில் கணிசமான சரிவு ஏற்பட்டு சென்செக்ஸ் 724,02 புள்ளிகள் உயர்வுடன் 41,340.16 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.
இதேபோல் நிஃப்டி குறியீடு 211 புள்ளிகள் உயர்ந்து 12,120.30 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது. இன்றைய பங்குச்சந்தை உயர்வுக்கு முக்கிய காரணங்களை தான் இப்போது பார்க்கப்போகிறோம்.
அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தலில் விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஜோ பிடன் மற்றும் டொனால்டு டிரம்ப் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் ஆட்சி அமைக்க 270 இடங்களில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் ஜோ பிடன் 270க்கு 264 இடத்தில் முன்னிலையில் இருக்கிறார். ஜோ பிடன் வெற்றி கிட்டதட்ட வெற்றியான நிலையில் ஆசிய சந்தை அனைத்தும் அதிகளவிலான முதலீட்டை பெற்று சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது.
பெடரல் வங்கி
அமெரிக்காவின் பெடரல் வங்கியின் கொள்கை கூட்டம் நடைபெற உள்ளது. ஆட்சி மாற்றத்தின் காரணமாகவும், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை சீர் செய்து வளர்ச்சி பாதைக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் அமெரிக்கா உள்ளதால் வட்டி விகிதத்தில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்க வாய்ப்புகள் இல்லை.
இது சர்வதேச சந்தைக்கு மிகவும் சாதகமான ஒன்று.
சேவை துறை
பிப்ரவரி மாதத்திற்குப் பின் சேவைத் துறை தொடர்ந்து சரிவு பாதையில் இருந்த நிலையில் அக்டோபர் மாதம் 54.1 புள்ளிகளை அடைந்து வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் இதன் அளவு 49.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 50 புள்ளிகளுக்கு மேல் இருந்து வளர்ச்சிப் பாதையில் இருப்பதாகப் பொருள்.
பாங்க் ஆப் பரோடா
பாங்க் ஆப் பரோடா, வாடிக்கையாளர் செய்யும் டெபாசிட் மற்றும் வித்டிராவல்களுக்கு நவம்பர் மாதம் முதல் புதிய கட்டணத்தை அறிவித்தது. இப்புதிய கட்டணத்திற்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவிய நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு புதுப்பிக்கக் கட்டணம் அனைத்தையும் திரும்பப்பெற்று பழைய கட்டணத்தையே தொடருவதாக அறிவித்துள்ளது.
எஸ்பிஐ
செப்டம்பர் காலாண்டில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நிகரலாபம் 52 சதவீதம் அதிகரித்து, 4.574.16 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதேகாலக்கட்டத்தில் 3,011.7 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாங்க் ஆப் பரோடா மற்றும் எஸ்பிஐ வங்கியின் மூலம் முதலீட்டாளர்கள் மத்தியில் இன்று வங்கி பங்குகள் மீது அதிகளவிலான முதலீடு செய்ய தூண்டியுள்ளது.
ஐடி நிறுவன பங்குகள்
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் ஜோ பிடன் முன்னிலையில் இருக்கும் காரணத்தால் டிரம்ப் விதித்த விசா கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்படும் என அனைத்து தரப்பு மக்களாலும் நம்பப்படுகிறது.
இதுமட்டும் அல்லாமல் அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரகம் விசாவுக்கான விண்ணப்பத்தை வாங்க துவங்கியுள்ளது.
டிசிஎஸ்
இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் இந்திய பங்குச்சந்தையில் ஐடி நிறுவன பங்குகள் மீது அதிகளவிலான முதலீடுகள் குவிந்தது. இதில் டிசிஎஸ் நிறுவன பங்குகள் இன்று 1.31 சதவீதம் அதிகரித்து 2,688 ரூபாய் வரையில் உயர்ந்தது.
ஆசிய சந்தையில் சிறப்பான வர்த்தகம்
அமெரிக்கச் சந்தையின் எதிரொலி காரணமாக வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் ஆசியச் சந்தை சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்ய துவங்கிய நிலையில் வர்த்தக முடிவில்
ஜப்பான் சந்தை 1.73 சதவீதம், சீனா ஷாங்காய் சந்தை 0.19 சதவீதம், ஹாங்காங் சந்தை 3.25 சதவீதம், ஆஸ்திரேலியா சந்தை 1.51 சதவீதம் உயர்ந்து இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்திற்குத் துணை நின்றது.