உலகம் முழுக்க கொரோனா வைரஸ் மனிதர்களின் உடல் நலத்தை சிதைத்துக் கொண்டு இருக்கிறது. லட்சக் கணக்கான மக்களின் உயிரையும் பறித்து இருக்கிறது.
இன்னொரு பக்கம், பொருளாதார ரீதியாக எல்லோரையும் வதைத்துக் கொண்டு இருக்கிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து மீள அரசாங்கங்கள் தங்களால் முடிந்த நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அப்படி இந்தியாவும் ஒரு பெரிய நடவடிக்கையை எடுக்க யோசித்துக் கொண்டு இருப்பதாக எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
என்ன விஷயம்
இந்தியாவில், கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட உணவகனங்கள், ஹோட்டல்கள் விமான சேவைத் துறை போன்ற துறைகளுக்கு சுமார் ஆறு மாதங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரிகளை (GST) ரத்து செய்வதைப் பற்றி இந்திய அரசு யோசித்துக் கொண்டு இருப்பதாக, விஷயம் தெரிந்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள் என்கிறது எகனாமிக் டைம்ஸ்.
ரியல் எஸ்டேட்
அதோடு ரியல் எஸ்டேட் துறைக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க யோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம். அதாவது ரியல் எஸ்டேட் துறைக்கு இப்போது வசூலித்துக் கொண்டு இருக்கும் ஜி எஸ் டி ரேட்டை கொஞ்சம் குறைப்பதைப் பற்றியும் பேசிக் கொண்டு இருக்கிறார்களாம்.
தற்போதைய கணக்கு முறை
இப்போது வரை, ஒருவருக்காக ஒரு பொருள் அல்லது சேவைக்கு இன்வாய்ஸ் தயாரித்துவிட்டாலே, விற்றவர், அந்த இன்வாய்ஸில் சொல்லப்பட்டு இருக்கும் தொகைக்கு சரக்கு மற்றும் சேவை வரியைச் செலுத்திவிட வேண்டும். பேமெண்ட் வந்துவிட்டதா என்பது எல்லாம் கணக்கில் கிடையாது.
புதிய முறை
ஆனால் இப்போது, இந்த பழைய முறையை விட்டுவிட்டு, பணம் பெற்றதன் அடிப்படையில் சரக்கு மற்றும் சேவை வரியை வசூலிக்கலாமா? எனவும் ஆலோசித்து வருகிறார்களாம். அதோடு இன்வாய்ஸ் கொடுத்தவைகளுக்கு பணம் வரவில்லை என்றால் அவைகளை வாரா கணக்கில் (Bad debts) வைக்கலாமா? எனவும் யோசித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.
என்ன நடக்கும்
இப்படி மேலே சொன்னவைகளை எல்லாம் செய்தால், ஏற்கனவே கொரோனா வைரஸால் கையில் காசு இல்லாமல் இருக்கும் வியாபாரிகள் கையில் கொஞ்சமாவது காசு புழங்கும் என்கிறார்கள். இந்த ஜிஎஸ்டி சார்ந்த முடிவுகளை எல்லாம் ஜிஎஸ்டி கவுன்சில் தான் எடுக்க வேண்டுமாம். எடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அரசு ஆலோசனை
ஒரு குறிப்பிட்ட துறைக்கு மட்டும் சரக்கு மற்றும் சேவை வரி தள்ளுபடி செய்தால், ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி (Input Tax Credit) பெறுவதில் சிக்கல் ஏற்படும். எனவே மொத்தமாக எல்லோருக்கும் சரக்கு மற்றும் சேவை வரிகளை சஸ்பெண்ட் செய்தால் சரிப்பட்டு வருமோ? எனவும் ஆலோசித்து வருகிறார்களாம். எது எப்படியோ ஜிஎஸ்டி வரியை தற்காலிகமாக ரத்து செய்தால் நல்லது தானே!