இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பு பற்றி அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நாட்டின் சரிந்திருக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என மத்திய அரசு பல முயற்சிகளைச் செய்து வரும் இந்த வேலையில், பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கான நிதியை அரசு நிறுவன பங்குகளை விற்பனை செய்து திரட்ட முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு, அரசு கையிருப்பில் இருக்கும் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்து சுமார் 2.10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதியைத் திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அதேவேளையில், நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்காக 163 பில்லியன் டாலர் அளவிலான நிதியைக் கடனாகப் பெற ஏற்கனவே திட்டமிடப்பட்டது.
இந்தக் கடன் அளவை தாண்டி அதிகமான தொகையைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
கொரோனா
யாரும் எதிர்பார்க்காத வகையில் கொரோனா நாட்டின் பொருளாதாரத்தைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு, பல கோடி மக்களின் வேலைவாய்ப்பைப் பிடுங்கியது மட்டும் அல்லாமல் வாரக்கடன் ஆபத்தில் இருக்கும் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனை இந்திய வங்கிகள் மறுசீரமைப்புச் செய்து கொடுத்து வருகிறது.
இந்தப் பாதிப்புகளின் எதிரொலியாக ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் -23.9 சதவீதம் வரையில் சரிந்தது.
கடன் இலக்கு
இந்த இக்கட்டான சூழ்நிலையில் நிதி தேவைக்காகக் கடன் இலக்கை விடவும் அதிகமான அளவில் கடன் வாங்குவது குறித்து நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும், தற்போது இலக்கான 12 டிரில்லியன் ரூபாய் (163 பில்லியன் டாலர்) கடன் அளவை விட எவ்வளவு அதிகத் தொகை கடன் வாங்க வேண்டும், எப்படிக் கடன் வாங்குவது என இந்த மாத இறுதியில் ஆலோசனை செய்ய உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
வருமான பாதிப்பு
கொரோனாவால் மத்திய அரசின் வரி வருவாய் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது நாட்டின் வளர்ச்சிக்கான பணிகளில் செலவு செய்யப் போதுமான நிதியில்லாமல் தவிக்கிறது இந்தியா.
நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் செப்டம்பர் 15ஆம் தேதி ஆலோசனை திட்டமிட்டுள்ளது. இக்கூட்டத்தில் நாட்டின் நிதி நிலை குறித்து முழுமையான விபரங்களை வைத்து ஆலோசனை செய்யப்படும் எனவும் தெரிகிறது.
2.10 லட்சம் கோடி ரூபாய்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் சுமார் 2.10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இந்த 2.10 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டும் திட்டத்தில் பொதுத் துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 1.20 லட்சம் கோடி ரூபாயும், மீதமுள்ள 90,000 கோடி ரூபாய் நிதியை நிதியியல் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் திரட்ட முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
முதலீடு
மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் பல்வேறு வழிகளில் திரட்டும் நிதியைத் துறைமுகம், சாலை மற்றும் இதர உள்கட்டுமான திட்டங்களுக்கு முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் உலகப் பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா எந்த விதத்திலும் 5வது இடத்தை விட்டுத் தரக்கூடாது என்ற உறுதியுடன் செயல்படத் திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்புத் தகவல்கள் தெரிகிறது.