இந்தியாவில் ஈரான் போரின் தாக்கம் படிப்படியாக தென்படத் தொடங்கி விட்டது. முதலில் எல்பிஜி கேஸ் தட்டுப்பாட்டில் தொடங்கி நம் வீட்டு சமையலறை வரை ஈரான் போரின் பாதிப்பை நாம் சந்திக்க நேர்ந்தது. இனிவரும் நாட்களில் அது இன்னும் அதிகரிக்க போகிறது என்பதையே பல்வேறு சிக்னல்களும் உணர்த்துகின்றன.
இந்தியா தனக்குத் தேவையான கச்சா எண்ணெய் ,எல்பிஜி கேஸ், உரம் மற்றும் பல்வேறு பொருட்களுக்கு வளைகுடா நாடுகளை தான் சார்ந்து இருக்கிறது. இரண்டு மாத காலமாக வளைகுடா நாடுகளில் இருந்து எந்த ஒரு பொருட்களும் இந்தியா வந்து சேரவில்லை. ஏனெனில் ஈரான் போர்காரணமாக முக்கிய கடல் வழி போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு விவகாரத்தில் ஈரானும் அமெரிக்காவும் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து போயிருக்கிறது.

போருக்கு முன்பு 75 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை தற்போது 110 டாலருக்கு மேல் உயர்ந்துவிட்டது. வழக்கமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல், டீசல் விலைகள் உயரும். ஆனால் மக்கள் நலன் கருதி அப்படி ஒரு முடிவு எடுக்கப்படவில்லை. இதனால் இந்தியாவை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 30,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் செயல்படுவது தெரிய வந்திருக்கிறது. எனவே கூடிய விரைவில் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படலாம் என சொல்லப்படுகிறது.
இந்த சூழலில் தான் பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்கள் பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் மிக முக்கியமான ஒரு கோரிக்கையும் பிரதமர் மோடி முன்வைத்தார். அதாவது அடுத்த ஓராண்டு காலத்திற்கு தங்கம் வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என மோடி வலியுறுத்தியுள்ளார். தங்கத்திற்கும் பெட்ரோல் , டீசல் விலைக்கும் என்ன தொடர்பு தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி கூறுவதன் பின்னணி என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியா தனக்கு தேவையான பெட்ரோல் டீசல் மட்டும் அல்ல பெருமளவிலான தங்கத்தையும் வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்கிறது. இந்த இறக்குமதி அனைத்திற்குமே நாம் அமெரிக்க டாலரை தான் பயன்படுத்துகிறோம். ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை உயர்ந்து அமெரிக்க டாலர் மதிப்பு வலுவடைந்து வருகிறது. இதனால் முன்பை விட அதிக அளவு ரூபாயை கொடுத்து அமெரிக்க டாலரை வாங்கி நாம் இந்த பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது.

இதனால் இந்தியாவிடம் இருப்பில் இருக்கும் டாலரின் அளவு வேகமாக குறைந்து வருகிறது. இந்தியர்கள் அதிகளவில் தங்கம் வாங்கும்போது இன்னும் அதிகமாக நாம் டாலர் கொடுத்து தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டும். இதனால் நம் கைவசம் இருக்கக்கூடிய பணம் அத்தியாவசிய பொருளான பெட்ரோல் டீசலுக்கு என பயன்படுத்தாமல் தங்கத்திற்கு அதிகம் பயன்படுத்தப்படக் கூடிய சூழல் உண்டாகும். இதனால் தான் பிரதமர் மோடி பொதுமக்கள் தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோளை அடுத்து மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தப் போகிறதோ என்ற விவாதம் எழுந்திருக்கிறது. ஏனெனில் தங்கம் விலை வரலாற்று உச்சத்தில் இருந்து தற்போது சரிவடைந்து இருக்கிறது இதனால் பொதுமக்கள் மத்தியில் இப்போது தங்கத்தை வாங்க வைத்துக் கொள்ளலாம் என்ற மனநிலை உண்டாகிறது. மக்கள் தங்கம் வாங்குவதை குறைக்க வேண்டும் நாட்டில் இருந்து டாலர் வெளியேறுவதை தடுக்க வேண்டும் என்றால் இறக்குமதி வரியை உயர்த்த வேண்டிய முடிவை மத்திய அரசு எடுக்க வாய்ப்புள்ளது.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்படும் போது தங்கத்தின் விலை உயரும். தற்போது இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக இருக்கிறது. இது உயர்த்தப்படும் போது தங்கத்தை இறக்குமதி செய்வதற்கு நிறுவனங்கள் அதிக செலவு செய்யும் நேரிடும். இது தங்கத்தின் விலையை தானாகவே உயர்த்து விடும். இதனால் மக்கள் தங்கம் வாங்குவதை கைவிடுவார்கள். பொதுமக்கள் தங்கம் வாங்குவதை தடுப்பதற்கு மத்திய அரசு இப்படி ஒரு உத்தியை கையாள்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இறக்குமதி வரி உயர்வு தற்காலிகமாக தங்கத்தின் விலையை உயர்த்தினாலும் நம் கையிருப்பில் இருக்கக்கூடிய டாலர் தங்கம் இறக்குமதிக்காக வெளியே செல்வது குறையும். இதனை கொண்டு நாம் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்க முடியும். தங்கத்தின் விலை உயர்ந்தால் மக்களிடையே தங்கம் வாங்கும் போக்கு குறையும் எனவே தங்கம் இறக்குமதி செய்யும் அளவும் குறையும் என்பதே மத்திய அரசின் திட்டமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications

