இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் மத்திய அரசு, தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், கொரோனா தடுப்பு மருந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்கும் பொருட்டு வெளிநாட்டில் இருந்து மருந்தை இறக்குமதி செய்வதற்கு ஏதுவான சூழ்நிலையை அமைத்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு 10 சதவீத சுங்க வரியை நீக்க உள்ளதாக மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த வரிக் குறைப்பு மூலம் இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து தடையில்லாமல் அனைவருக்கும் கிடைக்கும்.
வெளிநாட்டுக் கொரோனா தடுப்பு மருந்து
மத்திய அரசு ஏற்கனவே ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி வேக்சின் மருந்தை இந்தியாவிற்குக் கொண்டு வர உள்ள நிலையில், விரைவில் பைசர், மாடெர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்தையும் இந்தியாவிற்குக் கொண்டு வர பணிகளை மேற்கொண்டு வருகிறது.
தனியார் நிறுவனங்களுக்கு அதிகாரம்
மேலும் மத்திய அரசு தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களுக்கு இந்தக் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய அனுமதி வழங்க ஆலோசனை செய்து வருவதாகவும் இந்தப் பெயர் வெளியிட விரும்பாத உயர் அதிகாரி ரெயூட்டர்ஸ்-யிடம் தெரிவித்துள்ளார்.
அரசு தலையீடு
அரசு தலையீடு இல்லாமல் வெளிநாட்டில் இருந்து கொரோனா தடுப்பு மருந்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கினால் தடுப்பு மருந்துக்கான தொகையைத் தனியார் நிறுவனமே நிர்ணயம் செய்யும் அதிகாரம் பெறும், விலை நிர்ணயம் செய்வதில் அரசு தலையிட முடியாத நிலையும் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
250 ரூபாயில் வேக்சின்
இந்தியாவில் தற்போது சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் AstraZeneca-வின் கோவிஷீல்டு மற்றும் பார்த் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் ஆகிய இரு மருந்துகளை மட்டுமே பயன்படுத்தப்படுவதால் அரசு கையில் முழு கட்டுப்பாடு உள்ளது. இதனால் விலையும் 250 ரூபாய் என்றளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
இறக்குமதி வரி
தற்போது வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்படும் கொரோனா மருத்துக்கான இறக்குமதி வரியை 10 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது தனியார் அமைப்புகளுக்குப் பெரும் வாய்ப்பாக இருக்கலாம். இந்தியாவைப் போல் நேபாளம், பாகிஸ்தான், அர்ஜெண்டினா, பிரேசில் ஆகிய நாடுகளும் 10 முதல் 20 சதவீதம் வரையிலான இறக்குமதி வரியை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைவருக்கும் வேக்சின்
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இதைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 1 முதல் 18 வயதிற்கு அதிகமானோர் அனைவருக்கும் கோவிட் வேக்சின் பெற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சீரம் மற்றும் பாரதப் பயோடெக் முன்பணம்
அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து என்ற இந்தியாவிற்கு மிகவும் அவசியமான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ள நிலையில், அதைச் சாத்தியமாக்க கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் மற்றும் பாரதப் பயோடெக் ஆகிய நிறுவனங்களுக்கு வேக்சின் உற்பத்தியை அதிகரிக்க நிதியமைச்சகம் 4,567.50 கோடி ரூபாய் அளவிலான தொகையை முன்பணமாக அளிக்க உத்தரவிட்டுள்ளது.