டெல்லி: நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், சீனாவின் கொரோனா வைரஸ் இன்னும் மோசமான நிலைக்கு கொண்டு சென்று விடும் போல் இருக்கிறது. ஏனெனில் நாளுக்கு நாள் இந்தியாவின் ஏற்றுமதியும் குறைந்து வருகிறது. அதே சமயம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது.
சீனாவில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையினால், அந்த நாட்டின் மொத்த வர்த்தகமும் முடங்கி போயுள்ளது.
இது இந்தியாவுக்கும் பெரிய இடியாய் இருக்க போகிறது என்றே கூறலாம். சொல்லப்போனால் சீனாவிற்கு ஏற்றுமதி செய்வது குறைந்ததிலிருந்தே, காட்டன் மற்றும் நூல் விலை குறைந்துள்ளது.
காட்டன் நூல் விலை வீழ்ச்சி
இது குறித்து வெளியான அறிக்கையில், சீனாவில் கொரோனா தாக்குதலுக்கு பின்பு சீனா சந்தையின் நிச்சயமற்ற தன்மையால் காட்டன் மற்றும் நூல் விலை 4% குறைந்துள்ளது. இதே ராஜ்மா விலை 8% அதிகரித்துள்ளது. மேலும் இன்னும் சாதகமான முடிவுகள் எதுவும் கொரோனா குறித்து வெளியாகாமல் இருப்பதால், இன்னும் குறுகிய காலத்திற்கு ஏற்ற இறக்கமாகத் தான் சந்தை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சீனாவில் இருந்து இறக்குமதி
மேலும் தொழில் துறையினரின் மதிப்பீடுகளின் படி, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் ராஜ்மா தேவையில், 50% சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் சீனாவுக்கு ஆண்டுக்கு காட்டன் மற்றும் நூல் ஏற்றுமதி 25% ஆக உள்ளது. ஏற்றுமதி குறைந்துள்ள போது, இறக்குமதி அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
ராஜ்மா விலை அதிகரிப்பு
சீனாவின் டேலியன் துறைமுகத்தில் கப்பல் ஏதும் இல்லாததால் உலக சந்தையில் ராஜ்மா விலையில் 8% அதிகரித்து டன்னுக்கு 1,100 டாலராக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனாவில் பணி நிறுத்தம் தொடரும் நிலையில் இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய 300 கொள்கலன்களில் 24 டன் ராஜ்மா துறைமுகத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆக இந்த சரக்குகள் இந்தியா வந்தடையும் வரையில் விலை சற்று அதிகமாகத் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏற்றுமதி ரக நூல் விலை வீழ்ச்சி
இதே கடந்த 10 நாட்களில் ஏற்றுமதி ரகமான 30எஸ் ரக காட்டன் நூல் விலை 3 - 4% குறைந்து 185 - 200 ரூபாயாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் காட்டன் விலை 4% குறைந்து 365 கிலோ கேண்டிக்கு 39,500 ரூபாயாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவின் மொத்த காட்டன் நூல் ஏற்றுமதி 4,100 மில்லியன் கிலோ ஆகும். இதில் சீனாவுக்கு மட்டும் 1,100 - 1,200 மில்லியன் கிலோ ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் எதிரொலி
ஆக இந்தியாவில் அதிகளவில் காட்டன் நூல் இறக்குமதி செய்யும் சீனாவில் அசாதாரண சூழல் நிலவி வருவதால், அது இந்தியாவிலும் எதிரொலிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் தற்போது வாங்கி கொண்டிருப்பவர்களும் விலை மேலும் குறையலாம் என்று தங்கள் கொள்முதலை தள்ளி போட்டு வருவதாகவும் இவ்வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் சீனாவுக்கான ஏற்றுமதி நிறுத்தப்பட்ட நிலையில், பங்களாதேஷ் மற்றும் வியட் நாமில் இருந்து தேவை அதிகரிப்பு என்பது இல்லை. ஆக அனைவரும் நிலைமை எப்போது சீரடையும் என்று காத்துக் கொண்டுள்ளனர்.
ஏற்றுமதியில் தாமதம்
இந்திய பருத்தி சங்கத்தின் தலைவர் மகேஷ் ஷார்தா, சீன புத்தாண்டு விடுமுறையோடு, சீனாவில் கொரோனாவின் தாக்கம் ஆரம்பித்துள்ளது. இது சர்வதேச சந்தைகளையும் பாதித்துள்ளது. மேலும் இதற்கான முடிவுகள் பிப்ரவரி நடுப்பகுதியில் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் 170 கிலோ எடையுள்ள மூன்று லட்சம் பேல்கள் ஏற்றுமதி தாமதமாகியுள்ளது. கொரோனாவின் தாக்கமும் இதில் உள்ளது என்று கூறியுள்ளார்.
நிறுவனங்களை திறக்க தாமதமாகலாம்
இந்திய ஏற்றுமதியாளர்கள் சீனா நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளனர். மேலும் பலர் திங்கட்கிழமையன்று சில அலுவலகங்கள் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறினாலும், 1 -2 வாரங்கள் தாமதமாகலாம் என்றும் கூறப்படுகிறது.
உபயோகம் அதிகரிப்பு
இதே ராஜ்மா இறக்குமதி பிப்ரவரி 17லிருந்து தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. நாட்டில் தினசரி 8 கொள்கலன்கள் ராஜ்மா உபயோகப்படுத்தப்படுகிறது. இவற்றில் ஆறு கொள்கலன் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் வரத்து குறைந்திருந்தாலும், இன்று வரை சந்தையில் விலை நிலையானதாகத் தான் உள்ளது என்றும் கூறப்படுகிறது.