உலகிலேயே அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் தங்கத்தை நகையாக வாங்கி பயன்படுத்தும் போக்கு மக்களிடையே காலம் காலமாக இருந்து வருகிறது.
சாமானிய மக்களில் தொடங்கி பெரும் பணக்காரர்கள் வரை தங்கத்தை தங்களுடைய அந்தஸ்தாக பார்க்கிறார்கள். கையில் ஒரு சிறிய தொகை வந்தாலே தங்கத்தை நகையாக வாங்கி வைத்துவிடும் பழக்கம் இந்திய மக்களிடையே அதிகமாக இருக்கிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் இதன் காரணமாகவே இந்தியாவில் தங்கம் விற்பனை என்பது அதிகமாகவே இருக்கும்.

ஆனால் இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி திடீரென அதிகரித்து இருப்பதாகவும் அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் பிரபல தரகு நிறுவனமான நுவாமா எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இந்தியாவில் தங்கம் இறக்குமதியை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என அந்த அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
ஒரு நாடு தன்னுடைய பொருளாதாரத்தை சமநிலையுடன் வைத்து கொள்ள வர்த்தக சமநிலை பேணுவது அவசியம்.அதாவது ஏற்றுமதியும் இறக்குமதியும் பேலன்ஸ் செய்யப்பட வேண்டும். இந்த இரண்டுக்கும் வித்தியாசம் அதிகமாக இருந்தால் அதனை வர்த்தக பற்றாக்குறை என அழைப்பார்கள். இந்தியாவில் தற்போது வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
உலகளாவிய வர்த்தக போக்குகள் மந்த நிலையின் ஆரம்ப அறிகுறிகளோடு இருக்கும் சூழலில் இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்து இருக்கிறது இந்த இரண்டையும் சரியாக கவனித்தால் தான் வர்த்தக பற்றாக்குறையை சரி செய்ய முடியும் என நுவாமா அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அண்மையில் வெளியான வர்த்தக தரவுகளின் படி இந்தியாவில் சரக்கு வர்த்தக பற்றாக்குறை அக்டோபரில் 42 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. இது செப்டம்பரில் 32 பில்லியன் அமெரிக்க டாலராக மட்டுமே இருந்திருக்கிறது.
அதே வேளையில் இந்தியாவில் தங்கம் இறக்குமதி என்பது கடந்த இதே காலக்கட்டத்தில் 4.92 பில்லியன் டாலராக இருந்தது, அது இந்த ஆண்டு 14.77 டாலர்களாக 199% உயர்ந்திருக்கிறதாம் . தங்க வர்த்தக பற்றாக்குறை 7 பில்லியன் டாலர்கள் அதிகரித்ததன் காரணமாகவே இந்த அதிகபட்ச வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக கூறி இருக்கிறது . அதே வேளையில் எண்ணெய் பற்றாக்குறையும் 2 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறதாம்.
உலகளாவிய வர்த்தகம் மந்த நிலையில் செல்வதற்கான ஆரம்ப அறிகுறிகளை காட்டுவதால் இந்தியா தன்னுடைய தங்க இறக்குமதியை கவனிக்க வேண்டும், அப்பொழுதுதான் அதன் வர்த்தக பற்றாக்குறையை சரியான அளவில் மதிப்பிட்டு சரி செய்ய முடியும் என நுவாமா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக அளவு தங்கம் இறக்குமதி செய்யப்படும்போது நாட்டின் எக்ஸ்டர்னல் பேலன்ஸ் எனப்படும் வெளிப்புற இருப்புகளில் அது அழுத்தத்தை உருவாக்கும் என கூறி இருக்கிறது .
அதாவது ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருக்கிறது என்றால் நாட்டில் இருக்கும் அதிக பணம் வெளியே செல்கிறது என அர்த்தம். ஏற்கனவே அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவில் இருந்து நகை நவரத்தினங்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்கம் இறக்குமதி அதிகரித்துள்ளது. எனவே அதிக பணம் தங்கம் வாங்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது, அதில் எந்த ஒரு வருமானமும் நாட்டிற்கு கிடைக்கவில்லை.


Click it and Unblock the Notifications