இந்தியாவில் ஏற்கனவே பல வங்கிகள் அதிகளவிலான வராக்கடன் பிரச்சனையின் காரணமாக அடுத்தடுத்த ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் வரும் நிலையில் S&P Global Ratings அமைப்பு அடுத்த 12 முதல் 18 மாதத்தில் இந்திய வங்கிகளின் நிகர வராக்கடன் அளவு 11 சதவீதம் வரையில் அதிகரிக்கும் என அறிவித்துள்ளது.
S&P Global Ratings அமைப்பின் இந்தக் கணிப்பு ஏற்கனவே வங்கிகளில் முதலீடு செய்துள்ள பல கோடி முதலீட்டாளர்களை மேலும் பயமுறுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்திய வங்கிகள்
கொரோனா பாதிப்புக்குப் பின்பு இந்திய வங்கிகள் வராக்கடன் அளவில் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்து வருகிறது. 6 மாத கடன் சலுகைக்குப் பின் இந்திய வங்கிகள் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளது. ஆனால் கடனை செலுத்த முடியாத நிலைக்குப் பல வாடிக்கையாளர்கள் இந்திய வங்கிகளில் புதிதாக உருவாகியுள்ளனர்.
நிதி திரட்டல்
இந்த நிலையைச் சமாளிக்க இந்திய வங்கிகளும், NBFC நிறுவனங்களும் பங்குகளை விற்பனை செய்து அதிகளவிலான நிதியைத் திரட்டி தங்களது நிதி நிலையை மேம்படுத்தியுள்ளனர். இதன் காரணமாகக் கொரோனா பாதிப்பால் கடனை திருப்பிச் செலுத்த முடியாத பல கோடி வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் நிதியைக் கொடுத்துத் தொடர்ந்து வர்த்தகத்தில் இருக்கும் வகையில் வங்கிகள் இயங்கி வருகிறது.
வளர்ச்சி
இதோடு கொரோனா தொற்று, 6 மாத கடன் சலுகைக்குப் பின் NBFC நிறுவனங்களின் வர்த்தகம், வலிமையான வங்கிகளில் கடன் வசூல் அளவீடுகள் சிறப்பான முறையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
அதிக வராக்கடன்
ஆனால் கொரோனா-க்கு முன்பு மோசமான நிதிநிலையிலும், அதிக வராக்கடனில் இருக்கும் வங்கிகள் இனி வரும் காலகட்டத்தில் அதிகளவிலான பிரச்சனைகளை எதிர்கொள்ளப் போகிறது என S&P Global Ratings அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த மோசமான வங்கிகள் வாயிலாகவே அடுத்த 12 முதல் 18 மாதத்தில் இந்திய வங்கிகளின் நிகர வராக்கடன் அளவு 11 சதவீதம் வரையில் அதிகரிக்கும் என S&P Global Ratings அறிவித்துள்ளது.
லட்சுமி விலாஸ் வங்கி
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கோரிக்கையின் அடிப்படையில் மத்திய நிதியமைச்சகம் லட்சுமி விலாஸ் வங்கி மீது moratorium கட்டுப்பாடுகளை விதித்தது மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியது. கட்டுப்பாடுகளை விதித்த அடுத்த சில மணிநேரத்தில் ரிசர்வ் வங்கி LVB வங்கியைக் காப்பாற்ற DBS வங்கியுடன் இணைக்கும் திட்டத்தை அறிவித்து இவ்வங்கியைக் காப்பாற்றியது.
பிஎம்சி வங்கி
லட்சுமி விலாஸ் வங்கிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைப் போல் 2019ஆம் ஆண்டில் பஞ்சாப் மற்றும் மும்பை மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி லிமிடெட் (PMC) வங்கிக்குக் கட்டுப்பாட்டுக்குள் விதிக்கப்பட்டது. அந்த வங்கிக்கு 1000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கவோ, கொடுக்கவோ கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அதன்பின் 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
யெஸ் பேங்க்
வாராக்கடன், நிதி நெருக்கடி பல்வேறு மோசடிகள் காரணமாக மிகப்பெரிய சிக்கலில் சிக்கிக்கொண்ட யெஸ் பேங்க்-க்கும் இதேபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இவ்வங்கியில் டெபாசிட் வைத்திருப்போர் அதிகபட்சமாக ரூ.50,000 வரை மட்டுமே பணம் எடுக்கக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
559 தனியார் வங்கிகள்
இந்தியாவில் 1947 முதல் 1969 வரையிலான காலகட்டத்தில் சுமார் 559 தனியார் வங்கிகள் மூடப்பட்டு உள்ளது. இதன் பின்பு 1970 முதல் இன்று வரையில் சுமார் 36 தனியார் வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகமும் இணைந்து moratorium கட்டுப்பாடுகளை விதித்ததுள்ளது.
இதில் பல வங்கிகள் வலிமையான பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.