உச்ச நீதிமன்றம் அறிவித்த இரண்டு முக்கியமான தீர்ப்பு மூலம் 50,000 கோடி ரூபாய் அளவிலான கடன்களை வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் வங்கிகள், வங்கி அதிகாரிகள் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் இறங்க உள்ளது.
இந்த முயற்சியில் ஏதேனும் தோல்வி அடைந்தால் இந்த 50000 கோடி ரூபாய் கடனும் வாராக் கடனாக மாறி வங்கிகளுக்குப் பெரும் தலைவலியாக இருக்கும். ஏற்கனவே இந்திய வங்கிகளில் அதிகளவிலான வாராக் கடன் பிரச்சனை இருக்கும் நிலையில் இப்புதிய சுமை இந்திய வங்கித் துறையை மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு கொடுத்தது..? எந்த நிறுவனங்களுக்கு வங்கிகள் 50,000 கோடி ரூபாய் அதாவது 6.73 பில்லியன் டாலர் அளவிலான கடனை கொடுத்துள்ளது.
ரீடைல் துறை
கடந்த வாரம் இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தமாகக் கருதப்பட்ட ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் நிறுவனங்கள் மத்தியிலான ஒப்பந்தத்தைத் தடை செய்ய அமேசான் சிங்கப்பூர் நடுவர் அமைப்பில் வாங்கிய தடை உத்தரவை ஏற்க அனுமதி உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இதனால் பியூச்சர் குரூப் நிறுவனத்தைத் தற்போது ரிலையன்ஸ் கைப்பற்ற முடியாமல் நிற்கும் காரணத்தால் இந்நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட 2.69 பில்லியன் டாலர் அளவிலான கடனை திருப்பி வசூலிப்பதில் இந்திய வங்கிகள் புதிய பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது.
டெலிகாம் துறை
இதற்கு முன்பு இந்திய டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையைக் குறித்து டெலிகாம் துறையுடன் ஆலோசனை செய்து மனு கொடுத்த நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த மனுவை ஏற்க மறுத்தது இதனால் வோடபோன் ஐடியா நிறுவனம் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனம் அரசு செலுத்த வேண்டிய தொகையைத் திரட்ட முதலீடாகவும், கடனாகவும் பெற்ற முயற்சி செய்து தோல்வி அடைந்து வரும் நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
பியூச்சர் குரூப் - வங்கிகள்
2021ஆம் ஆண்டுத் துவக்கத்தில் பியூச்சர் குரூப் - வங்கிகளுக்கு மத்தியிலான பேச்சுவார்த்தையில், ரிலையன்ஸ் ரீடைல் கைப்பற்றல் திட்டத்தின் வாயிலாக 2.69 பில்லியன் டாலர் அளவிலான கடனை திருப்பிச் செலுத்த 2 வருடம் அவகாசம் கொடுக்கப்பட்டது. தற்போது ரிலையன்ஸ் - பியூச்சர் குரூப் மத்தியிலான ஒப்பந்தம் முடங்கியுள்ளது.
இதனால் பியூச்சர் குரூப் தற்போது திவாலாக அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பியூச்சர் குரூப் மற்றும் வங்கி தரப்பில் இருந்து இதுவரை யாரும் பதிலோ, விளக்கமோ அளிக்கவில்லை.
பியூச்சர் குரூப் நிறுவனத்திற்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆ பரோடா, பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் கடன் கொடுத்துள்ளது. தற்போது பியூச்சர் குரூப் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட கடனை வசூலிக்கும் குழுவிற்குப் பாங்க் ஆப் இந்தியா தலைமை விகிக்கிறது.
வோடாபோன் ஐடியா- வங்கிகள்
30,000 கோடி ரூபாய் அளவிலான கடன் மற்றும் நிலுவை தொகை பாக்கி வைத்துள்ள வோடபோன் ஐடியா நிறுவனத்துடன் வங்கிகள் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. இந்திய சந்தையில் தொடர்ந்து டெலிகாம் வாடிக்கையாளர்களை இழந்து வரும் இந்நிறுவனத்திற்கு இக்கடன் பெரும் சுமையாக உள்ளது.
வோடாபோன் ஐடியா நிறுவனத்திற்கு யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி, இண்ட்ஸ்இந்த் வங்கிகள் அதிகளவிலான கடனை கொடுத்துள்ளது. இந்த 4 வங்கிகளுடன் இன்னும் பல தனியார் மற்றும் அரசு வங்கி, நிதி நிறுவனங்கள் கடன் கொடுத்துள்ளது.
இந்திய வங்கிகள்
மார்ச் மாத முடிவில் இந்திய வங்கிகளின் வாராக் கடன் அளவு 8.34 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் புதிதாக 50,000 கோடி ரூபாய் வாராக் கடன் என்பது பெரும் சுமையாக இருக்கும்.