கொரோனா பாதிப்பால் இந்தியப் பொருளாதாரமும், வர்த்தகச் சந்தையும் எந்த அளவிற்குப் பாதிப்பு அடைந்தது என அனைவருக்கும் தெரியும், இந்த மோசமான காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தைத் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரே ஒரு துறை விவசாயமும், விவசாயிகளும் தான்.
பொதுவாக விவசாயத் துறையையும், விவசாயிகளும் பெரியதாக யாரும் கவனிப்பது இல்லை, முக்கியத்துவம் கொடுப்பது இல்லை எனக் கருத்து நிலவி வரும் நிலையில் இந்தியப் பொருளாதாரம் மோசமான சூழ்நிலையில் இருக்கும் போது அதைத் தூக்கி நிறுத்தியது விவசாயம் தான்.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் உச்சத்தைத் தொட்ட போது கிராமங்கள் மற்றும் டவுன் பகுதிகளில் தொற்று எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இதனால் கிரமங்களில் வர்த்தகமும், விவசாய உற்பத்தியும் சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பு
2020ஆம் ஆண்டில் கடந்த 6 மாத காலத்தில் நாட்டின் பல பகுதிகளில் பருவமழை சிறப்பாக இருந்த காரணத்தால் இந்த வருடம் விவசாய உற்பத்தி அதிகமாகி ஊரகப் பகுதியில் வர்த்தகம் புதிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வர்த்தகத் தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் விவசாயத் துறை உற்பத்தி மற்றும் ஊரக வர்த்தகத்தைக் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
டிமாண்ட்
பருவமழை காரணமாக விவசாயத் துறை மற்றும் உற்பத்தியில் ஏற்படும் மாற்றம் கிராம் மற்றும் ஊரக வளர்ச்சியில் பெரிய அளவிலான வர்த்தகச் சந்தையை உருவாக்கும் எனக் கணிப்புகள் வெளியானதை அடுத்து, ஆட்டோமொபைல் முதல் சிமெண்ட் வரையில் பல முக்கியத் துறை சார்ந்த முன்னணி நிறுவனங்கள் தங்களது வர்த்தக இலக்கை கிராமப்புறம் மீது திருப்பியுள்ளனர்.
இதுமட்டும் அல்லாமல் நகைக் கடைகள் அனைத்தும் கிராம மக்களை ஈர்க்கும் வகையில் விளம்பரம் செய்யத் துவங்கியுள்ளனர் என்பது கவனிக்கப்பட வேண்டியது.
பெரு நகரங்கள்
கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் நிலையிலும் கிராமப்புறம் மற்றும் விவசாயத் துறை வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், நகரங்களில் இன்னும் பல நிறுவனங்கள் வர்த்தகத்தை ஈர்க்க தடுமாறி வருகிறது. கொரோனாவால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பில் இருந்து இன்னும் நிறுவனங்கள் மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதனால் நகரபுற வேலைவாய்ப்பும் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்டு உள்ளது.
கார், பைக் மற்றும் டயர்
கிராமபுறம் மற்றும் விவசாயத் துறை வளர்ச்சி அடைந்து வரும் காரணத்தால் நகரபுறங்களைக் காட்டிலும் கிராமம் மற்றும் டவுன் பகுதியில் ஸ்டீல், சிமெண்ட், கார், பைக், டயர், நகைகளின் வர்த்தகமும், தேவையும் அதிகரித்துள்ளது. இது டிசம்பர் காலாண்டு வரையில் நீட்டிக்கும் எனவு எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமப்புறத்தில் ஏற்பட்டுள்ள வர்த்தக வளர்ச்சி நாட்டின் அனைத்து நிறுவனங்களையும் தன் பக்கம் இழத்துள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, ஹூண்டாய், இரு சக்கர வாகன தயாரிப்பில் ஹூரோ மோட்டோ கார்ப் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களும், டயர் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனமான ஜேகே டயர் ஆகிய நிறுவனங்கள் இக்காலகட்டத்தில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ளதற்கு முக்கியக் காரணம் கிராமபுறம் மற்றும் விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி தான் எனத் தெரிவித்துள்ளது.
உற்பத்தி அளவு
இந்த வருடம் பருவ மழை மிகவும் சிறப்பாக இருந்த காரணத்தால் மத்திய அரசு விவசாயப் பொருட்களின் உற்பத்தி அளவு 144.5 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய அரசு சில முக்கியப் பொருட்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதனால் ஊரகப் பகுதி மக்களின் வருமானத்தை அதிகரிப்பது மட்டும் அல்லாமல் வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த முடிவு செய்துள்ளது.
ஜீரோ பாதிப்பு
கொரோனாவால் அறிவிக்கப்பட்ட லாக்டவுனில் நாட்டின் விவசாயத் துறையின் உற்பத்தி எவ்விதமான பாதிப்பும் அடைவில்லை. இதன் காராணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தற்போது விவசாய துறையைப் பெரிய அளவில் நம்பப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி
இதுமட்டும் அல்லாமல் பருவமழை காரணமாக எப்போதும் இல்லாத வகையில் இந்த வருடம் விவசாயத் துறை உற்பத்தி அதிகமாக இருக்கும் காரணத்தால் வர்த்தக நிறுவனங்களின் முக்கிய இலக்காக விவசாயத் துறை மாறியுள்ளது.
டிசம்பர் காலாண்டு முடிவில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 50 சதவீதத்திற்கும் அதிகமான அளவு விவசாயத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியைச் சார்ந்து இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.