அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகளைக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
புதன்கிழமை வர்த்தகத்தில் எப்போதும் இல்லாத வகையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 83-க்குக் கீழ் சரிந்து மத்திய அரசையும், ரிசர்வ் வங்கியையும் பீதியில் ஆழ்த்தியது.
இதன் மூலம் 2022 ஆம் ஆண்டில் மட்டும் ரூபாய் மதிப்பு சுமார் 11 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. ஆனால் நிஃப்டி வெறும் 1 சதவீதம் மட்டுமே சரிந்துள்ளது.
இந்திய ரூபாய்
வியாழக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.075 வரையில் சரிந்து மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. விரைவில் 84 ரூபாய் அளவீட்டைத் தொடும் எனக் கணிக்கப்பட்டு வரும் நிலையில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் இதன் மூலம் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதைக் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
முதலீட்டு சந்தை
பொதுவாகப் பலவீனமான நாணயம் என்பது பங்குச்சந்தைக்குக் கெட்ட செய்தியாகும், ரூபாய் மதிப்பு சரிவால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை விற்பனை செய்து வெளியேற்ற அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
இந்திய சந்தை
இப்படிப் பார்த்தால் இந்திய சந்தையில் இருந்து 2022 ஆம் ஆண்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வெளியேற்றப்பட்டு உள்ளது, ஆனால் பெரும்பாலான முதலீட்டு இழப்பை புதிய முதலீடுகள் மூலம் ஈடு செய்யப்பட்டு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
ரூபாய் மதிப்புச் சரிவு
இதனாலேயே ரூபாய் மதிப்புச் சரிந்தாலும், இந்திய சந்தையில் அதிக வளர்ச்சி வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் தொடர்ந்து முதலீடு குவிந்து வருகிறது. இதனால் ரூபாய் மதிப்புச் சரிவு சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகளைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை, ஆனால் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள், துறை சார்ந்த மாற்றங்கள், நிறுவனங்களின் செயல்பாடுகள் மூலம் பல நிறுவனங்கள் பெரும் சரிவை 2022ல் எதிர்கொண்டு உள்ளது.
நிர்மலா சீதாராமன்
சமீபத்தில் கூட மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் ரூபாய் மதிப்புப் பலவீனமாக இருப்பதால் சரியவில்லை, அமெரிக்க டாலர் மதிப்பு ஆதிக்கம் அதிகரிப்பதால் சரிகிறது எனத் தெரிவித்தார். இது மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ரிசர்வ் வங்கி
மேலும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு, நாணய கொள்கை தளர்வுகளைக் குறைத்தது, டாலர் இருப்பைக் குறைத்தது மூலம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பின் சரிவை சில காலம் கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா உட்பட உலக நாடுகளின் வட்டி விகித உயர்வால் ரூபாய் மதிப்பு மீண்டும் சரிவு பாதைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.