கொரோனா முதல் மற்றும் 2வது அலையில் பலர் தங்களது வேலைவாய்ப்புகளை இழந்த காரணத்தால் கையில் இருக்கும் சேமிப்புகள் அனைத்தையும் செலவு செய்தது மட்டும் அல்லாமல் கல்வி, மருத்துச் செலவுகளுக்குக் கையில் இருக்கும் தங்க நகைகளை அடகு வைத்துப் பணப் பிரச்சனைகளைத் தீர்த்து வந்தனர்.
இன்னும் வேலைவாய்ப்பு இல்லாமல் பல கோடி மக்கள் இந்தியா முழுவதும் தவித்து வரும் காரணத்தாலும், வர்த்தகச் சந்தை முழுமையாக மீண்டு வராத நிலையில், 3வது அலை ஆபத்து உருவாகியிருக்கும் காரணத்தாலும் தற்போது மக்கள் உணவு, வீட்டு வாடகை போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அடகு வைத்த தங்கத்தை விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.
கொரோனாவும் மக்களும்
கொரோனா தொற்றைத் தடுக்க இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட லாக்டவுன் கட்டுப்பாடுகள் பல கோடி மக்களை வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளியது மட்டும் அல்லாமல் பலரைத் திவாலாக்கியுள்ளது.
இதனால் மக்கள் தற்போது வேலைவாய்ப்பு இல்லாமலும் வருமானம் இல்லாமலும் தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கடைசிக் கட்டத்திற்கு வந்துள்ளனர்.
தங்கம் விற்பனை
மக்கள் தற்போது வருமானம் இல்லாத காரணத்தால் கையில் இருக்கும் தங்கத்தை அடகு வைப்பதை விடவும் விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளனர். குறிப்பாகக் கிராம பகுதியில் இருக்கும் மக்கள் அதிகளவில் தங்கத்தை விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.
மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம்
இந்தியாவின் மிகப்பெரிய தங்க நகை கடன் வழங்கும் நிறுவனமான மணப்புரம் பைனான்ஸ் லிமிடெட் ஏப்ரல் 2020 முதல் டிசம்பர் 2020 வரையிலான 9 மாத காலகட்டத்தில் தங்கம் மீது கடன் வாங்கியவர்கள் கடன் திருப்பிச் செலுத்தாத நிலையில் 8 கோடி ரூபாய் அளவிலான தங்கத்தை ஏலம் மூலம் விற்பனை செய்துள்ளது.
ரூ. 400 கோடி பழைய தங்கம்
ஆனால் ஜனவரி 2021 முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் மட்டும் சுமார் 400 கோடி ரூபாய் அளவிலான தங்கத்தை ஏலம் மூலம் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் தங்க நகை கடன் வாங்கி கடனை திருப்பிச் செலுத்தாதோர் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளது தெரிகிறது.
சாமானிய மக்களின் நிலை
மணப்புரம் பைனான்ஸ் லிமிடெட்-ன் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தினசரி கூலி வேலை செய்பவர்கள், சிறு தொழில் செய்பவர்கள், விவசாயிகள் தான். மக்கள் தங்கம் மீது வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாதது நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்திற்குப் பெரும் பிரச்சனையாக மாறும் அளவிற்குச் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கிராம புற மக்கள்
இந்தியாவில் அதிகம் தங்கம் வாங்குவது கிராம புற மக்கள் தான், இன்றளவும் இந்தியக் கிராமங்களில் மிகவும் குறைவான வங்கிகள் மட்டுமே இருக்கும் காரணத்தால் மக்களுக்கு உடனடியாகப் பணத் தேவையைப் பூர்த்தி செய்யத் தங்கம் மட்டுமே ஓரே வழியாக உள்ளது. பொதுவாகத் தங்கத்தையும், தங்க நகைகளையும் அடகு வைக்கும் மக்கள் தற்போது விற்பனை செய்யத் துவங்கியுள்ளனர்.
தங்க நகை கடனுக்கு வட்டி
கொரோனா முதல் அலையில் மக்கள் தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெற்று வந்த நிலையில், தற்போது வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் இல்லாத காரணத்தால் கடனுக்கு வட்டி செலுத்த முடியாது என உணர்ந்த மக்கள் கொரோனா 2வது அலையில் தங்கத்தை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் 3வது அலையும் தற்போது துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
215 டன் பழைய தங்கம்
இந்தியாவில் 3வது அலை உறுதியாகும் பட்சத்தில் சந்தைக்கு வரும் பழைய தங்கத்தின் அளவு 215 டன்னாக உயரும். இது கிட்டதட்ட 9 வருட உயர்வு என லண்டனை சேர்ந்த மெட்டல் ஃபோகஸ் லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரி சிராக் சேத் கணித்துள்ளார்.
சுவிஸ் நாட்டுத் தங்கம்
கச்சா எண்ணெய் போல இந்தியாவில் தங்கத்திற்கான தேவையை இந்தியா வெளிநாட்டு இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்கிறது. குறிப்பாக இந்தியாவிற்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகளவிலான தங்கம் சுவிஸ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
தங்க இறக்குமதி சரியும்
இந்தச் சூழ்நிலையில் 3வது அலையில் மக்கள் தங்கள் கையில் இருக்கும் தங்கத்தை அதிகம் விற்பனை செய்தால் உள்நாட்டிலேயே அதிகளவிலான தங்கம் சந்தைக்கு வரும் காரணத்தால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவு குறையும்.
3வது கொரோனா அலை
இந்த லாக்டவுன் காலத்தில் மட்டும் இந்தியாவில் சுமார் 20 கோடி பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் அதாவது ஒரு நாளுக்கு 5 டாலருக்கு குறைவாகச் சம்பாதிக்கும் நிலையை அடைந்துள்ளனர். இந்நிலையில் 3வது அலை வந்தால் இந்த எண்ணிக்கை குறைந்தபட்சம் இரட்டிப்பு வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications