கால மாற்றத்துக்கு ஏற்ப நம் உணவு முறைகளிலும் பல மாற்றங்களை காண முடிகிறது. ஆனால் அது நம் உடலுக்கு ஆரோக்கியமானதா என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது. இந்தியாவில் Junk food எனப்படும் துரித உணவுகளை உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இது ஒட்டுமொத்த நாட்டின் எதிர்காலத்திற்கே பேராபத்து என பிரதமர் மோடிக்கான தலைமை பொருளாதார ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊட்டச்சத்துக்கள் குறைந்த அதே வேளையில் கலோரி, சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு சத்து அதிகம் கொண்ட உணவுகளை தான் துரித உணவுகள் என அழைக்கிறோம். இந்தியாவில் இது போன்ற துரித உணவுகளை நுகரும் போக்கு அதிகரிப்பது நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என பிரதமர் நரேந்திர மோடிக்கான தலைமை பொருளாதார ஆலோசகரான வி ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்திய வணிக கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடிக்கான தலைமை பொருளாதார ஆலோசகர் வி ஆனந்த நாகேஸ்வரன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது தற்போதுள்ள இளைஞர்களுக்கு நாம் என்ன வழங்குகிறோம் என்பது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என தெரிவித்தார். இந்தியாவில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை விளம்பரம் செய்ய வேண்டிய பொறுப்பு அனைவரிடமும் இருக்கிறது என குறிப்பிட்டார்.
தனியார் துறையினர் இதில் பங்காற்ற வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர் தற்போதுள்ள இளம் தலைமுறைக்கு நாம் என்ன மாதிரியான பொருட்களை கொண்டு சேர்க்கிறோம் என்பது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என கூறியுள்ளார். இளம் தலைமுறையினரை நோக்கி சந்தைப்படுத்தும் பொருட்களை மறு மதிப்பீடு செய்ய வேண்டிய அவசியம் வந்திருக்கிறது எனக் கூறியுள்ளார்.
இந்தியாவில் ஏற்கனவே ஜங்க் ஃபுட் எனப்படும் ஊட்டச்சத்து இல்லாத துரித உணவுகளை உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது ,இத்தோடு மொபைல் போன் பார்க்கும் பழக்கம் அதிகரித்துவிட்டது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கும் எதிர்காலத்துக்கும் மிகப்பெரிய ஆபத்தாக அமைந்திருக்கிறது என அப்போது அவர் எச்சரித்தார். தனியார் நிறுவனங்கள் தங்களின் லாபத்தில் ஒரு பகுதியை சிஎஸ்ஆர் எனப்படும் சமூக நல பணிகளுக்காக வழங்குகின்றன, ஆனால் அது மட்டும் போதாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாம் இருக்கக்கூடிய நாட்டில் மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு என தெரிவித்தார். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மக்களிடம் கொண்டு சேருங்கள் என அவர் அப்போது வலியுறுத்தினார். இந்தியாவில் அண்மைக்காலமாகவே துரித உணவுகளின் நுகர்வு அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் மத்தியில் துரித உணவுகளை உண்பதும் அதிகமாக மொபைல் போன் பார்ப்பதும் அதிகரித்து இருப்பதால் உடல் பருமன் ,நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
அண்மையில் தான் பிரிட்டனை சேர்ந்த லிவர்பூல் பல்கலைக்கழகம் ஒரு ஆய்வினை நடத்தியது. அதில் துரித உணவுகளை உண்பதற்கும் துரித உணவுகள் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை பார்ப்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்தது. அதாவது ஒரு நாளைக்கு ஐந்து நிமிடத்திற்கு குழந்தைகள் துரித உணவு தொடர்பான விளம்பரங்களை பார்த்தாலே அவர்கள் அந்த நாளில் கூடுதலாக 130 கிலோ கலோரியை உட்கொள்கின்றனர் என தெரிவிக்கிறது .அதாவது நாம் தொலைக்காட்சிகளில் காட்டும் விளம்பரங்கள் குழந்தைகளை அதிகமான துரித உணவுகளை உண்ண தூண்டுகின்றன என அந்த ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இது மட்டும் இல்லாமல் உணவுப் பழக்கம் மாறி வரக்கூடிய இந்த சூழலில் பலரும் செல்போனுக்கு அடிமையாக மாறி வருகின்றனர். இது நம்முடைய உடல் மற்றும் மன நலனில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறையினர் உடல் இயக்கமே இல்லாமல் இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உலக மக்கள் தொகையில் முதல் நாடாக இருந்தாலும் ஆரோக்கியமான மக்கள் தொகையாக இருந்தால் மட்டுமே தொடர்ந்து பொருளாதார ரீதியாகவும் இந்தியாவில் முன்னேறி வர முடியும். எனவே துரித உணவுகள் மற்றும் அதிக சர்க்கரை கொண்ட பானங்களை உண்பதை தவிர்க்க வேண்டும், அதிக கொழுப்பு கொண்ட எண்ணெயில் அதிகம் வறுத்தெடுத்த உணவுகள் உட்கொள்வதை மக்கள் குறைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகின்றனர்.
ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும், யோகா உள்ளிட்டவற்றில் மக்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். இதை எல்லாம் பின்பற்றினால் தான் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என தொடர்ந்து மருத்துவர்கள் அறிவுரை வழங்கிய வண்ணம் இருக்கின்றனர். மத்திய அரசை பொருத்தவரை அரசுக்கு தற்போது இந்த துரித உணவு பிரச்சனையும் இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் சர்க்கரை நோய் உள்ளிட்டவை அதிகரித்து வருவதும் பெரிய கவலையாக உருவெடுத்து இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி கூட அண்மையில் இந்தியர்கள் அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும் என கேட்டுக்கொண்டார் . உடல் பருமன் உள்ளிட்ட பிரச்சனைகளிலிருந்து இந்தியா மீண்டு வர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார் . இந்தியா ஒரு வளர்ந்த நாடாக வர வேண்டும் என்றால் அதன் மக்கள் தொகை ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் எனவே மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை பராமரிப்பதும் நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றும் ஒரு மிகப்பெரிய பங்களிப்பு என பிரதமர் நரேந்திர மோடி அப்போது குறிப்பிட்டு இருந்தார். மேலும் இந்திய மக்கள் அனைவரும் தங்களுடைய எண்ணெய் நுகர்வினை 10% குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இது உடல் எடை மேலாண்மையில் மிகச்சிறந்த உதவியை வழங்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார் .
மத்திய அரசு ஊட்டச்சத்து நிறைந்த உணவை எடுக்க வேண்டும், துரித உணவுகளை தவிர்க்க வேண்டும், உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும் என பள்ளிகளில் இருந்தே மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும் என்றால் மக்கள் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை கட்டாயம் வழங்க வேண்டும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications