பெங்களூரு: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்ஃபோசிஸ் மீது 32,403 கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவை தொடர்பான நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. 2017 முதல் ஐந்து ஆண்டுகளாக இன்போசிஸ் இந்நிறுவனம் வெளிநாட்டுக் கிளைகளால் வழங்கப்பட்ட சேவைகளுக்காக இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், கர்நாடகா மாநில ஜிஎஸ்டி அலுவலகம் 2017 ஜூலை முதல் 2022 மார்ச் வரை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வெளிநாட்டுக் கிளைகளால் பதிவு செய்யப்பட்ட செலவுகளுக்காக 32,403 கோடி ரூபாய் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என ப்ரீ ஷோ நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், அதற்கு நிறுவனம் பதிலளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விவகாரம் குறித்து ஜிஎஸ்டி இன்டெலிஜென்ஸ் இயக்குனரகம் (டிஜிஜிஐ) மூலமாகவும் நோட்டீஸ் வந்துள்ளதாகவும், அதற்கு நிறுவனம் பதிலளிக்கும் செயல்பாட்டில் உள்ளதாகவும் இன்போசிஸ் தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநில ஜிஎஸ்டி அலுவலகம் மற்றும் ஜிஎஸ்டி இன்டெலிஜென்ஸ் இயக்குனரகம் நோட்டீஸ் படி, 2017 ஜூலை முதல் 2021-22 வரை 32,403.46 கோடி ரூபாய் தொகைக்கு ரீவர்ஸ் சார்ஜ் முறையில் ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி) செலுத்த வேண்டும்.
இந்த நிலையில் இன்போசிஸ் கொடுத்த விளக்கத்தில் ரீவர்ஸ் சார்ஜ் முறையின்படி, சரக்கு அல்லது சேவையை வழங்குபவர் அல்லாமல், பெறுபவரே வரியைச் செலுத்த வேண்டும். இதன் மூலம் இன்போசிஸ் அனைத்து வரி நிலுவைகளையும் முழுமையாகச் செலுத்தியுள்ளதாகவும், தற்போது நோட்டீஸ் படி ஜிஎஸ்டி வரி விதிப்பு பொருந்தாது என்றும் கூறியுள்ளது. மேலும் "இன்ஃபோசிஸ் அனைத்து ஜிஎஸ்டி நிலுவைகளையும் செலுத்தியுள்ளது மற்றும் இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றுகிறது" என்று இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜிஎஸ்டி செலவுகள் தகவல் தொழில்நுட்ப சேவை ஏற்றுமதிக்கு எதிராக கிரெடிட் அல்லது திரும்பப் பெறத் தகுதியுடையது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications