பட்ஜெட் தாக்கல், பொருளாதார அறிக்கை வெளியீடு எனப் பல்வேறு காரணங்களால் மும்பை பங்குச்சந்தை கடந்த 6 நாட்களாகத் தொடர் வர்த்தகச் சரிவில் இருந்து வருகிறது.
குறிப்பாக ஐடி, வங்கி, ஆட்டோமொபைல் துறை சார்ந்த நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்ட நிலையில் இன்றைய வர்த்தகத்தில் ஏற்பட்ட வர்த்தகச் சரிவின் மூலம் முதலீட்டாளர்கள் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை இழந்துள்ளனர்.
பொருளாதார ஆய்வறிக்கை
இதுமட்டும் அல்லாமல் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்செக்ஸ் குறியீடு தடாலடியாகச் சரிந்து ஏமாற்றத்தை அளித்தது.
கிரெடிட் ரேட்டிங்
2021-22ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சவரின் கிரெடிட் ரேட்டிங் அமைப்பு இந்தியாவிற்கு BBB- என்ற மோசமான மதிப்பீட்டைக் கொடுத்துள்ளது. இது இந்தியச் சந்தையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி
இதுபோக மார்ச் காலாண்டு முடிவில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று வெளியான பொருளாதார ஆய்வறிக்கையில் 2021ஆம் நிதியாண்டு முடிவில் இந்தியப் பொருளாதாரம் -7.7 சதவீதமாக இருக்கும் என அறிவித்துள்ளது. 2022ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 11 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிவிப்புகள் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் இன்றைய வர்த்தகத்தில் அதிகளவிலான முதலீட்டு வெளியேறிய காரணத்தால் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 588 புள்ளிகள் சரிந்து 46,285.77 புள்ளிகளை அடைந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 182.95 புள்ளிகள் சரிந்து 13,634.60 புள்ளிகள் அடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவின் மூலம் முதலீட்டாளர்கள் கிட்டதட்ட 2 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளனர்.
2 லட்சம் கோடி ரூபாய்
ஜனவரி 20ஆம் தேதி சென்செக்ஸ் குறியீடு 49,792 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் இன்று 46,285 புள்ளிகளுக்கு வர்த்தகம் முடிவடைந்துள்ளது. இதனால் கடந்த 6 வர்த்தக நாட்களில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 3507 புள்ளிகள் சரிந்துள்ளது. இதன் மூலம் கிட்டதட்ட கடந்த ஒரு மாதத்தில் ஏற்பட்ட வளர்ச்சி முழுமையாக மாயமாகியுள்ளது.