பங்கு சந்தையில் முதலீடா? அச்சச்சோ வேண்டவே வேண்டாம் என்ற நிலை தான் கடந்த சில வாரங்களாக சந்தையில் நிலவி வருகின்றது.
குறிப்பாக உக்ரைன் ரஷ்யா பிரச்சனைக்கு இடையில் சர்வதேச நாடுகள் விலைவாசி உயர்வால் தத்தளித்து வருகின்றன. இது பணவீக்கத்தினை வரலாறு காணாத அளவு உச்சத்தினை எட்ட வழிவகுத்துள்ளது.
இதற்கிடையில் பணவீக்கத்தினை கட்டுக்குள் கொண்டு மத்திய வங்கிகள் ஒரு வட்டி விகித்ததினை ஏறகனவே உயர்த்த ஆரம்பித்துள்ளன. தற்போது வரையில் உயர்த்த ஆர்வம் காட்டி வருகின்றன.
தாக்கத்தினை ஏற்படுத்தும் காரணிகள்
குறிப்பாக உலகின் முன்னணி பொருளாதார நாடான அமெரிக்காவின் மத்திய வங்கியின் அதிகரிப்பால், சர்வதேச அளவில் பங்கு சந்தையில் மிகப்பெரிய தாக்கம் இருந்து வருகின்றது. இதனை ஊக்கப்படுத்தும் விதமாக சீனாவின் கொரோனா பெருந்தொற்று அந்த நாட்டினை பதம் பார்க்க தொடங்கியுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையும் நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகின்றது.
ரூ.26 லட்சம் கோடி இழப்பு?
இந்த சவாலான நிலைக்கு மத்தியில் கடந்த 8 அமர்வுகளில் மட்டும் முதலீட்டாளர்கள் 26 லட்சம் கோடி ரூபாய் இழப்பினைக் கண்டுள்ளனர். பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் சந்தை மதிப்பானது கடந்த ஏப்ரல் 29 அன்று 266.97 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது மே 12 நிலவரப்படி 241.13 லட்சம் கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
என்ன காரணம்?
இது தொடர்ந்து ஈக்விட்டி சந்தையில் இருந்து வெளியேறி வரும் அன்னிய முதலீடுகள், கச்சா எண்ணெய் விலையேற்றம், பணவீக்கம், பொருளாதார சரிவு அச்சம், ரூபாய் சரிவு என பல காரணிகளுக்கும் மத்தியில் சந்தையானது பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது. இது மேலும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தின் காரணமாக தொடர்ந்து முதலீடுகள் வெளியேறி வருகின்றன.
அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்
குறிப்பாக கடந்த 8 அமர்வுகளில் மட்டும் அன்னிய முதலீட்டாளார்கள் 23,665 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இதே கடந்த ஏப்ரல் மாதத்தில் 40,652 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியிருந்தது நினைவுக்கூறத்தக்கது.
நடப்பு மாத நிலவரம்
இதற்கிடையில் நடப்பு மாதத்தில் மட்டும் சென்செக்ஸ் 4130 புள்ளிகல் சரிவினை கண்டுள்ளது. ஏப்ரல் 29 அன்று 57,060 என்ற லெவலில் முடிந்த சென்செக்ஸ், கடந்த அமர்வில் 52,930 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் நிஃப்டியும் 1294 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளன. இது கடந்த அமர்வில் 18,808 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இது கடந்த ஏப்ரல் 29 அன்று 17,102 புள்ளிகளாகவும் இருந்தது.
இன்றைய நிலவரம் என்ன?
தற்போது 10. 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 271.58 புள்ளிகள் அதிகரித்து, 53,193.28 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 95.6 புள்ளிகள் அதிகரித்து, 15,904.30 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.