இந்தியர்களையும் கிரிக்கெட்டையும் பிரிக்க முடியாது என சொல்லும் அளவிற்கு கிரிக்கெட் என்பது இந்தியர்களின் ரத்தத்தில் ஊறிப் போன ஒரு விஷயமாக இருக்கிறது. அதுவும் அண்மைக்காலமாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது ஐபிஎல் போட்டிகள். இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக ஐபிஎல் போட்டிகள் திகழ்கின்றன. பல்லாயிரம் கோடி கணக்கிலான பணம் இதில் விளையாடுகிறது.
நடப்பாண்டிலும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு போட்டி மே மாத கடைசியில் முடிகிறது. அனைத்து போட்டிகளிலும் மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்து காணப்படுவதை காண முடிகிறது. ஐபிஎல் போட்டிகள் தற்போதுள்ள இளசுகளின் மிக முக்கியமான ஒரு பொழுதுபோக்கு அம்சமாகும். போட்டியை மைதானத்தில் கண்டு ரசிக்க அத்தனை போட்டி நிலவுகிறது.

இத்தகைய சூழலில் தான் ஐபிஎல் அணிகள் சார்பாக மத்திய நிதி அமைச்சகத்திடம் மிக முக்கியமான ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பொழுதுபோக்கு அம்சங்களாக வரையறுக்கப்பட்டு இருக்கின்றன. இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் கட்டணத்தில் 40 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அதாவது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு விற்பனை செய்யப்படக்கூடிய டிக்கெட்டுகளுக்கு 40 சதவீதம் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட வேண்டும் என்பது ஜிஎஸ்டி கவுன்சில் வெளியிட்டு இருக்கக்கூடிய விதிமுறை.
அதன் அடிப்படையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் பொழுதுபோக்கு அம்சமாக வரையறை செய்யப்பட்டு இருப்பதால் அந்த போட்டிகளுக்கான டிக்கெட்டுகளுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது. ஆனால் இதனை வழக்கமான விளையாட்டு நிகழ்வாக மாற்ற வேண்டுமென ஐபிஎல் அணிகள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழக்கமான விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளாக இவற்றை மாற்றும்போது டிக்கெட்களுக்கான ஜிஎஸ்டி வரி 40 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறையும்.

தற்போது இந்தியாவில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் அனைத்துமே வழக்கமான விளையாட்டு போட்டிகளாக கருதப்பட்டு அவற்றின் டிக்கெட்டுகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி தான் விதிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது ஐபிஎல் போட்டிகளை மட்டும் ஏன் பொழுதுபோக்கு அம்சமாக மாற்றி 40 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்பட வேண்டும் என ஐபிஎல் அணிகள் சார்பாக கேள்வி எழுப்பப்படுகிறது.
இந்தியாவில் தற்போது பாவப் பொருட்களாக சிகரெட், பான் மசாலா, கேம்பிளிங், கேசினோ போன்ற சூதாட்ட விளையாட்டுக்களுக்கும் ஆடம்பர வாகனங்களுக்கும்தான் 40 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஐபிஎல் எப்படி இந்த பட்டியலில் சேரும் என ஐபிஎல் அணிகள் சார்பாக கேள்வி முன் வைக்கிறது. ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் ஒரு ஆரோக்கியமான குடும்பங்கள் கண்டு ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு போட்டிகளாக இருக்கக்கூடிய நிலையில் அவற்றுக்கான அதனை விளையாட்டு நிகழ்வாக மாற்றி அவருக்கான ஜிஎஸ்டி குறைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கின்றன.
செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கக்கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என சொல்லப்படுகிறது. தற்போது சராசரியாக ஒரு ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது என வைத்துக் கொண்டால் அதற்கு 40% ஜிஎஸ்டியாக 400 ரூபாயில் கூடுதலாக செலுத்தி 1400 ரூபாய் நாம் கட்டணமாக செலுத்த வேண்டும். இதுவே 18% என குறைத்தால் 1180 ரூபாய் டிக்கெட் கட்டணமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications

