எப்போது முடிவுக்கு வரும் என உலகமே உற்று நோக்கி இருந்த ஈரான் போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. வரும் வெள்ளிக்கிழமை ஈரானும் அமெரிக்காவும் இணைந்து அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட போகின்றன. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை முதல் ஹார்முஸ் ஜலசந்தி வழக்கம் போல கப்பல் போக்குவரத்துக்காக திறக்கப்பட இருக்கிறது. இந்தியாவை பொருத்தவரை இது மிகச் சிறப்பான ஒரு செய்தி.
இந்தியா தனக்கு தேவையான கச்சா எண்ணெய், எல்பிஜி, உரம் உள்ளிட்டவற்றை வளைகுடா நாடுகளிடமிருந்தும் ஈரானிடம் இருந்தும் தான் வாங்குகிறது. திடீரென பிப்ரவரி 28ஆம் தேதியிலிருந்து கச்சா எண்ணெய் வரத்தும் எல்பிஜி வரத்தும் நின்று போனது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் மிகக் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டது. பொது மக்களுக்கு முறையாக சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்யும் நோக்கில் அரசு சிலிண்டர் விநியோகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது.

அது மட்டுமில்லாமல் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் ,பெட்ரோல் ,டீசல் ஆகியவற்றின் விலைகளை கடுமையாக உயர்த்தி இருக்கின்றன. குறிப்பாக வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 3000 ரூபாய்க்கு மேல் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு ,பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பால், மளிகை பொருள், காய்கறி, பழங்கள் என பல்வேறு பொருட்களின் விலைகளும் உயர்வு கண்டிருக்கின்றன. இதனால் சாதாரண குடும்ப மக்களின் மாதாந்திர பட்ஜெட்டில் கூடுதல் செலவு ஏற்பட்டிருக்கிறது.
எப்போது தான் இந்த போர் முடிவுக்கு வருமோ என கோடிக்கணக்கான இந்திய மக்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில் தான் அமெரிக்க அதிபர் வரும் வெள்ளிக்கிழமை முதல் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் என்ற நல்ல செய்தியை தெரிவித்திருக்கிறார். எனவே வெள்ளி கிழமை முதல் கச்சா எண்ணெய் விநியோகம் சீராகி விடுமா என்றால் 100 சதவீதம் அது பழைய நிலைக்கு திரும்புவதற்கு இன்னும் சில காலம் தேவைப்படும். ஏனெனில் தற்போதைக்கு இந்த வளைகுடா நாடுகளில் சிக்கியிருக்க கூடிய சரக்கு கப்பல்கள் தான் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வெளியே வரும். அதில் இருக்கக்கூடிய சரக்குகள் முதலில் இந்தியா வந்து சேரும்.
போர் காரணமாக சில எண்ணெய் கிணறுகளில் உள்கட்டமைப்புகள் சேதம் அடைந்திருக்கின்றன. அவற்றை சீர் செய்து பழைய முறைப்படி 100% கச்சா எண்ணெய் விநியோகமும் எல்பிஜி விநியோகமும் சீராவதற்கு சில மாதங்கள் தேவைப்படும். ஈரான் அமெரிக்கா இடையிலான இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது அடுத்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் வரை குறைந்தது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4 சதவீதம் குறைந்து ஒரு பேரல் 83.88 டாலராக வர்த்தகமானது. WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 80 டாலர்களாக விற்பனை செய்யப்படுகிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைகிறது என்றால் இந்திய நிறுவனங்களுக்கும் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கும். எனவே இந்தியாவில் அடுத்து வரக்கூடிய நாட்களில் பெட்ரோல் , டீசல் விலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் விநியோகம் சீராகும் போது மேலும் பெட்ரோல், டீசல் விலைகள் குறையும். இன்றைய தினம் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 107.87 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 99.66 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
எல்பிஜி விநியோகம் சீராகி சிலிண்டர் விலையும் குறைவதற்கான வாய்ப்பு உண்டாகி இருக்கிறது. ஈரான் போர் முடிவுக்கு வந்ததால் பெட்ரோல் , டீசல், சிலிண்டர் விலைகள் குறையும் என்றாலும் தங்கத்தின் விலையை இது உயர்த்தும். போர் காரணமாக முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை கச்சா எண்ணெய் மற்றும் டாலரில் அதிகமாக முதலீடு செய்தனர் இதனால் தங்கத்திற்கான டிமாண்ட் குறைந்து அதன் விலை குறைந்தது. தற்போது போர் முடிவுக்கு வருவதால் இன்று முதல் தங்கத்தின் விலை அதிகரிக்க தொடங்கும்.
உலக சந்தையில் ஒரே நாளில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 107 டாலர்கள் அதாவது 2.5% உயர்ந்து 4,327 டாலருக்கு வர்த்தகமாகிறது, அதே வேளையில் வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 3.75 % உயர்ந்து70.46 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது. எனவே இந்தியாவிலும் இன்று தங்கம், வெள்ளி விலைகள் உயர்வது உறுதி.


Click it and Unblock the Notifications

