இந்திய ரீடைல் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருந்த பியூச்சர் குரூப்-ஐ கைப்பற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒப்பந்தம் செய்த நிலையில் அமேசான் தொடுத்த வழக்கு மூலம் தடைப் பெற்றுள்ளது. சுமார் 18 மாதங்களாக நடந்து வரும் இந்த வழக்கில் பெரிய அளவிலான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
இதேவேளையில் பியூச்சர் குரூப் நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்த வங்கிகள் தற்போது பொறுமை இழந்துள்ளது.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - பியூச்சர் குரூப் - அமேசான் மத்தியிலான பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும் எனப் பியூச்சர் குரூப்-க்கு கடன் கொடுத்த வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் காத்திருந்த நிலையில், தற்போது தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் IBC நடவடிக்கைகள் எடுக்கப் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பியூச்சர் ரீடைல்
இதன் மூலம் பியூச்சர் ரீடைல் நிறுவனத்தைக் கைப்பற்றும் வாய்ப்பை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் இழக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோலவே அமேசானும் பியூச்சர் ரீடைல் நிறுவனத்தை நேரடியாகக் கைப்பற்றும் வாய்ப்பை இழக்கிறது.
பாங்க் ஆப் இந்தியா
தற்போது பியூச்சர் குரூப் நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த வங்கிகள், நிதி நிறுவனங்கள் அனைத்தும் பாங்க் ஆப் இந்தியா தலைமையிலான அமைப்பு மார்ச் 29ஆம் தேதிக்குள்ள நிதியியல் மற்றும் டெக்னிக்கல் மதிப்பீட்டைத் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் IBC பிரிவு அதிகாரிகளிடம் இருந்து பெற உள்ளது.
CSB வங்கி
ஏற்கனவே இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பியூச்சர் குரூப் நிறுவனத்திடம் இருந்து கொடுத்த கடனை திருப்பிக் கேட்டு வரும் நிலையில், பிரேம் வட்சாவின் ஃபேர்ஃபாக்ஸ் குழுமத்திற்குச் சொந்தமான CSB வங்கி, பியூச்சர் ரீடைல் மற்றும் ஃபியூச்சர் எண்டர்பிரைசஸ் நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டிய 2.5 கோடி ரூபாய்க்கும் அதிகமான பாதுகாப்பற்ற கடனை செலுத்தக் கோரி கடன் மீட்பு தீர்ப்பாயத்தை (DRT) அணுகியது.
சொத்து கைப்பற்றல்
இந்நிலையில் வங்கி அமைப்பு பியூச்சர் குரூப் நிறுவனத்திற்குக் கொடுத்த கடனை திரும்பப் பெற Sarfaesi சட்டம் வழியாக அதாவது இந்நிறுவன சொத்துக்களைக் கைப்பற்றி ஏலம் விட்டு அதன் மூலம் பணத்தை வசூலிக்கும் முறை பற்றி வழக்கு விசாரணை ஏப்ரல் 11ஆம் தேதி நடக்க உள்ளது.