இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது டெலிகாம் மற்றும் ரீடைல் வர்த்தகப் பிரிவின் மூலம் பல புதிய வர்த்தகத் துறைக்குள் நுழைந்து வரும் நிலையில் தற்போது புதிதாத செயற்கை நுண்ணறிவு மற்றும் கேமிங் துறைக்குள் நுழைந்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ.
முகேஷ் அம்பானி வழக்கம்போல் புதிய வர்த்தகத்திற்கு நுழைய ஆரம்பம் முதல் பணிகளைத் துவங்காமல் அத்துறையில் ஏற்கனவே சிறந்து விளங்கும் நிறுவனத்தைக் கைப்பற்றுவதைப் போல், இந்த முறையும் செயற்கை நுண்ணறிவு மற்றும் கேமிங் துறையில் நுழைய கிர்கீ என்னும் அமெரிக்க நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ
மொபைல் கேமிங்க நிறுவனமான கிர்கீ (krikey) சான் பிரான்சிஸ்கோ நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு வர்த்தகம் செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் சீரியல் ஏ முதலீட்டுச் சுற்றில் அறிவிக்கப்படாத தொகையை முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் கீர்கி உடனான கூட்டணியில் இந்தியாவில் ஜியோ நிறுவனம் AR கேமிங் சேவையை அளிக்க முடியும்.
கிர்கீ நிறுவனம் இதுவரை சுமார் 22 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடாக ஈர்த்துள்ளது.
யாத்ரா
மேலும் கிர்கீ நிறுவனம் புதிதாக யாத்ரா என்னும் புதிய AR கேமிங் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கேம் ஒரு ராட்ச கூட்டத்தை அழிக்கும் ஆக்சன் கேம் ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது. ராட்ச கூட்டத்தை அம்பு, சக்கரம், இடி, நெருப்பு பந்து போன்றவற்றைக் கொண்டு அழிக்க முடியும். மேலும் பல லெவல்களைக் கொண்டுள்ளது.
ஆகாஷ் அம்பானி
கிர்கீ பல கோடி இந்தியர்களின் AR கேமிங் தாகத்தைத் தீர்க்கவும், ஈர்க்கவும் செய்யும். உலக நாடுகளில் இருக்கும் சிறப்பான அனுபவத்தை இந்தியாவில் கொண்டு வருவது தான் எங்களது முக்கிய இலக்காக உள்ளது, இந்த வழித்தடத்தில் முதல் படி தான் யாத்ரா. யாத்ரா AR கேமிங் சேவைக்கு ஜியோ மற்றும் ஜியோ அல்லாத அனைத்து வாடிக்கையாளர்களையும் வரவேற்கிறோம் என ரிலையன்ஸ் ஜியோவின் தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்.
ஜியோ கைப்பற்றிய நிறுவனங்கள்
கடந்த சில வருடத்தில் ரிலையன்ஸ் சுமார் 13 நிறுவனங்களை முழுமையாகவும், அதிகளவிலான பங்குகளையும் கைப்பற்றியுள்ளது. இதன் படி எம்பிபி, ரேடிசிஸ், ஹேம்லீஸ், ரிவெர்ஐ, ஹேப்டிக், கிராப், டென் கம்யூனிகேஷன்ஸ், பைன்ட், நெட்மெட்ஸ், அர்பன் லேடர், சாவன், பியூச்சர் குரூப், தற்போது கிர்கீ நிறுவனத்தின் பங்குகள்.