இந்தியாவில் விற்பனை பொருட்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் ஜிஎஸ்டி வரி அமைப்பிற்குள் கொண்டு வந்து ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் மட்டும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாமல் பழைய மறைமுக வரி விதிப்பையே மத்திய மாநில அரசுகள் தொடர்கிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தால் மக்களுக்குப் பெரும் சுமையாக மாறிய நிலையில் சாமானிய மக்கள் எரிபொருள் மீது விதிக்கப்படும் மறைமுக வரியை நீக்கிவிட்டு ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து வந்தனர்.
கேரள உயர் நீதிமன்றம்
கேரள உயர் நீதிமன்றத்தில் பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் கொண்டு வர வேண்டும் என ஜிஎஸ்டி கவுன்சில்-க்கு எதிராகப் பொது நல வழக்குத் தொடரப்பட்டது. இதற்குத் தலைமை நீதிபதி எஸ் மணிகுமார் தலைமையிலான பென்ச் ஜிஎஸ்டி கவுன்சில்-க்கு 10 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில்
ஜிஎஸ்டி கவுன்சிலை ஏன் பெட்ரோல், டீசல் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவில்லை என்பதற்கான விளக்கத்தை அடுத்த 10 நாட்களுக்குள் அதிகாரப்பூர்வ பதிலை அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
செப்டம்பர் 17ஆம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட்ட போது அனைத்து மாநிலமும் வருவாய் அளவீடு பாதிக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு மறுப்புத் தெரிவித்தது. இதனால் ஜிஎஸ்டி கவுன்சில் வாக்கு எண்ணிக்கையில் பெட்ரோல், டீசல் மீது ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது.
பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியம் பொருட்கள் ஜிஎஸ்டி அமைப்பிற்குள் இருந்தாலும், இதன் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாமல் மத்திய மாநில அரசுகள் அதிக வரி வருமானம் ஈட்டும் விதமாகப் பழையபடி மறைமுக வரி விதிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு கைகளுக்கு
இதேபோல் ஜிஎஸ்டி வரி வந்த பின்பு வரி வசூல் அனைத்தும் மொத்தமாக மத்திய அரசு கைகளுக்குச் செல்லும் காரணத்தால் மாநில அரசுக்கான ஆதிக்கம் பெரிய அளவில் குறைந்துள்ளது. மேலும் வரி வருமான பங்கீடும் குறைந்த காரணத்தால் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் அவ்வப்போது ஜிஎஸ்டி கவுன்சில் உடன் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.
மாநில அரசு நிலை
இந்தச் சூழ்நிலையில் மாநில அரசுக்கு வரி ஆதாயம் கிடைக்கும் ஒரு சில பொருட்களில் பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியம் பொருட்கள் இருக்கும் காரணத்தால் இதை விட்டுக்கொடுக்க மறுக்கிறது மாநில அரசுகள்.
வரி பங்கீடு
இதற்குப் பெரும் பிரச்சனையாக இருப்பது அதிக வருவாய் அளிக்கும் மாநிலத்திற்குக் குறைவான வரி பங்கீடு அளிப்பது தான். வரி வருமானத்திற்கு ஏற்றவாறு ஜிஎஸ்டி வரியை பிரித்துக்கொடுத்தால் பெட்ரோல், டீசல் மற்றும் இதர பெட்ரோலியம் பொருட்களை எவ்விதமான பிரச்சனையுமின்றி ஜிஎஸ்டி வரி விதிக்க முடியும்.