முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் கிஷோர் பியானியின் பியூச்சர் குரூப் இடையிலான 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமேசான் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையத்தின் (SIAC) மூலம் தற்காலிக தடை பெற்றது.
அமேசானின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும், தடை உத்தரவை நீக்கவும், ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பியூச்சர் குரூப் ஒப்பந்தத்தில் அமேசானுக்கு எவ்விதமான தொடர்பும் இல்லை எனத் தெரிவித்து கிஷோர் பியானி உயர் கோட்டில் வழக்குத் தொடுத்துள்ளார்.
இந்த வழக்கின் எதிரொலியாக ரிலையன்ஸ் பங்குகளும், பியூச்சர் ரீடைல் நிறுவன பங்குகளும் வளர்ச்சி அடையும் என முதலீட்டாளர்கள் மத்தியில் கணிப்பு நிலவுகிறது.
கிஷோர் பியானி
பியூச்சர் குரூப் தலைவர் கிஷோர் பியானி டெல்லி உயர் நீதிமன்றத்தில் நவம்பர் 7ஆம் தேதி தொடுத்த வழக்கில், ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பியூச்சர் குரூப் ஒப்பந்தத்திற்கு எதிராக அமேசான்.காம் நிறுவனத்தின் ஹோல்டிங் நிறுவனமான NV இண்வெஸ்ட்மென்ட் ஹோல்டிக்ஸ் எல்எல்சி நிறுவனம் SIAC அமைப்பில் பெற்ற தடை உத்தரவை நீக்கக் கோரி வழக்குத் தொடுத்துள்ளார்.
அமேசானிற்கு இடமில்லை
ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பியூச்சர் குரூப் நிறுவனங்கள் மத்தியில் செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்திற்கும் அமேசான் நிறுவனத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை, ஒப்பந்தத்திலும் அமேசான் இடம்பெறவில்லை. இதனால் அமேசான் பெற்ற தடை உத்தரவைப் பெற எவ்விதமான உரிமையும் இல்லை எனத் தெரிவித்துள்ளது பியூச்சர் குரூப்.
15 நிறுவனங்கள் தடை
2019ல் அமேசான் நிறுவனம், பியூச்சர் குரூப் குழுமத்தின் கிளை மற்றும் ஹோல்டிங் நிறுவனமான பியூச்சர் கூப்பன் நிறுவனத்தில் சுமார் 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் 49 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் கேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் வால்மார்ட், அலிபாபா, சாப்ட்பேங்க், கூகிள், நேஸ்பர்ஸ், ஈபே, டாக்கெட், பேடிஎம், சோமேட்டோ, ஸ்விக்கி உட்படச் சுமார் 15 நிறுவனங்களின் பெயரைக் குறிப்பிட்டு வெளிப்படையாகவே, இந்த நிறுவனங்கள் எந்தக் காரணத்திற்காகவும் பங்குகளையோ, வர்த்தகத்தையோ கைப்பற்றக் கூடாது எனக் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்துள்ளது.
ஒப்பந்தம் மீறல்
இதன் காரணமாகவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பியூச்சர் குரூப் உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நேரடியாக இறங்காகமல் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் பெயரில் ஒப்பந்தம் செய்யதது.
இதை முன்வைத்து தான் தற்போது பியூச்சர் குரூப் கிஷோர் பியானி வழக்குத் தொடுத்துள்ளார்.
பியூச்சர் குரூப்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் கிஷோர் பியானியின் பியூச்சர் குரூப் இடையிலான 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்திற்குத் தற்போது சிங்கப்பூரில் அமேசான் தடை உத்தரவையும், இந்தியாவில் கிஷோர் பியானியும் அமேசானுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ள காரணத்தால் இந்த ஒப்பந்தம் விரைவில் முடிவு பெறாது.
இதனால் ரிலையன்ஸ்-க்கு பியூச்சர் குரூப் வர்த்தகங்கள் எதுவும் கிடைக்காது, அதேபோல் பியூச்சர் குரூப்-க்கும் 24,713 கோடி ரூபாயில் எவ்விதமான தொகையும் கிடைக்காது.
முதலீட்டாளர்கள்
அமேசான் - ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - பியூச்சர் குரூப் இடையில் நடக்கும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டு உள்ளது முதலீட்டாளர்கள் தான். இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக அமேசான் தடை உத்தரவு பெற்ற போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பியூச்சர் குரூப் பங்குகள் பெரிய அளவிலான சரிவைச் சந்தித்து.
இந்நிலையில் திங்கட்கிழமை வர்த்தகத்திலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பியூச்சர் குரூப் பங்குகள் கணிசமாகச் சரிய வாய்ப்புகள் உள்ளது.