இந்தக் கொரோனா காலத்தில் பல லட்ச நிறுவனங்கள் வர்த்தகத்தையும் வருவாயும் இழந்து நிற்கும் வேளையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மட்டும் விஸ்வரூப வளர்ச்சியை அடைந்து உள்ளது. முதலில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் டிஜிட்டல் சேவை பிரிவின் பங்குகளை விற்பனை செய்து 1.5 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீட்டைப் பெற்ற கடன் இல்லா நிறுவனமாக உருவெடுத்தது.
இந்த முதலீடும், கடன் இல்லா நிலையிலும் இந்திய முதலீட்டாளர்களை மட்டும் அல்லாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் பெரிய அளவில் ஈர்த்தது. இந்நிலையில் புதன்கிழமை மாலை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது ரீடைல் வர்த்தகப் பிரிவு பங்குகளை விற்பனை செய்யக் களத்தில் இறங்கியுள்ளது.
ஆம் 1.75 சதவீத ரிலையன்ஸ் ரீடைல் பங்குகளைச் சில்வர் லேக் நிறுவனத்திற்குச் சுமார் 7,500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்த அடுத் சில நிமிடங்களில் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான KKR ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்யப் பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளது.
KKR
உலகளவில் பல முன்னணி நிறுவனங்களில் முதலீடு செய்து வரும் KKR, சில்வர் லேக் நிறுவனத்தின் முதலீட்டைத் தொடர்ந்து ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் முதலீடு செய்யத் தயாராகி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது
இவ்விரு நிறுவனங்களின் முதலீடு குறித்து அறிந்த நபர்கள் KKR ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர் முதல் 1.5 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இருதரப்பும் இதுகுறித்து இதுவரை எவ்விதமான அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இந்த மாத இறுதிக்குள் இந்த முதலீடு பேச்சுவார்த்தை குறித்த முடிவுகள் வெளியாகலாம் எனக் கணிப்பு நிலவுகிறது.
ஜியோ
இதற்கு முன்னர் முகேஷ் அம்பானி ஜியோ நிறுவன பங்குகளை விற்பனை செய்யும் போது ஜியோ நிறுவனத்தில் சில்வர் லேக் 1.35 பில்லியன் டாலரும், கேகேஆர் 1.5 பில்லியன் டாலர் தொகையும் முதலீடு செய்து ஜியோ நிறுவனத்தின் பங்குகளைக் கைப்பற்றியது. தற்போது அதேபோல் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திலும் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
பியூச்சர் குரூப்
பல மாத போராட்டங்கள், ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் கிஷேர் பியானியின் பியூச்சர் குரூப் வர்த்தகத்தை மொத்தமாகக் கைப்பற்றியது. இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்குப் புதிதாக 30,000 கோடி ரூபாய் அளவிலான புதிய வருவாயுடன் சேர்த்து, மொத்த விற்பனையின் அளவு 1,93,000 கோடி ரூபாய் ($29.5 பில்லியன்) அளவிற்கு உயர உள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் வகைப்படுத்தப்பட்ட மொத்த ரீடைல் சந்தையின் 89 பில்லியன் டாலர் வர்த்தகத்தில் ரிலையன்ஸ் 30 சதவீத கைப்பற்றியுள்ளது.
மதிப்பீடு
பியூச்சர் குரூப் வர்த்தகத்திற்கு முன் ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகப் பிரிவின் மொத்த மதிப்பு 1.5 முதல் 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டைப் பெற்ற நிலையில், தற்போது பியூச்சர் குரூப் கைப்பற்றிய பின்பு சில்வர் லேக் முதலீடு செய்வதாக அறிவிக்கப்பட்ட 7300 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.