2020ஆம் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதன் மூலம் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பில் இருந்து உலக நாடுகளில் நிறுவனங்கள் மீண்டும் வரும் இதேவேளையில் பல முன்னணி நிறுவனத்தில் முக்கியமான நிர்வாகம் மாற்றம் அடைந்து வருகிறது.
சமீபத்தில் கூட இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் நிறுவனத்தின் ஷிவ் நாடார் நிர்வாகப் பொறுப்பில் இருந்து விலகி தனது இடத்தை ஓரே மகளான ரோஷினி நாடாருக்கு அளிக்கப்பட்டது. இதேபோல் பாட்டா நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகத் தலைவர் மாற்றப்பட்டார். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்நிலையில் தற்போது இந்த நிர்வாக மாற்றம் ஆர்சலர்மிட்டல் நிறுவனத்தில் நடந்துள்ளது.
லட்சுமி மிட்டல் பதவி விலகல்
உலகின் மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமாக விளங்கும் ஆர்சலர்மிட்டல் குழுமத்தில் உயர்மட்ட நிர்வாகத்தில் மிகவும் முக்கியமான மாற்றம் அடைந்துள்ளது. இக்குழுமத்தின் சிஇஓ மற்றும் நிறுவனரான லட்சுமி மிட்டல், சிஇஓ பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். ஆர்சலர்மிட்டல் குழுமத்தில் லட்சுமி மிட்டல் சுமார் 36 சதவீத பங்குகளை வைத்துள்ளார்.
ஆர்சலர்மிட்டல் குழுமம்
லட்சுமி மிட்டல்-ன் பதவி விலகல் இக்குழுமத்தின் நிர்வாகத்திற்கு அதிர்ச்சியாக இருக்கும் நிலையில், புதிய சிஇஓ-வாக 20 வருடமாக லட்சுமி மிட்டல் உடன் பணியாற்றும் 45 வயதான அவரது மகன் ஆதித்யா மிட்டல் புதிய சிஇஓ-வாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
லட்சுமி மிட்டல்
இந்த நிர்வாக மாற்றத்தின் மூலம் லட்சுமி மிட்டல் இனி நிறுவனத்தின் தினசரி நிர்வாகப் பணிகளில் ஈடுபடமாட்டார். மொத்த நிர்வாகப் பணிகளை மகன் ஆதித்யா மிட்டல் ஏற்கும் நிலையில், லட்சுமி மிட்டல் இனி ஆர்சலர்மிட்டல் குழுமத்தின் எக்ஸ்கியூடிவ் சேர்மேன் ஆகப் பதிவி வகிக்க உள்ளார். இதன் மூலம் குழுமத்தின் நிர்வாகப் பணிகளில் மட்டுமே முடிவுகளை எடுக்க உள்ளார்.
புதிய சிஇஓ ஆதித்யா மிட்டல்
ஆர்சலர்மிட்டல் குழுமத்தில் சிஇஓ-வாகப் பதவியேற்றுள்ள ஆதித்யா மிட்டல்-க்குத் தற்போது இருக்கும் மிகப்பெரிய பொறுப்பு, முதலீட்டாளர்களின் முதலீட்டுக்கு அதிக லாபத்தைக் கொடுக்க வேண்டும், இதேவேளையில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் ஸ்டீல் தொழிற்சாலைகளைப் பசுமை தொழிற்சாலையாக மாற்ற வேண்டும்.
20 வருட பணியில் ஆதித்யா மிட்டல்
45 வயதாகும் ஆதித்யா மிட்டல், மிட்டல் குழுமத்தில் 1997ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். 2006ஆம் ஆண்டு மிட்டல் குழுமம் ஆர்சலர்மிட்டல் குழுமத்தை சுமார் 34 பில்லியன் டாலர் மதிப்பிற்குக் கைப்பற்றும் திட்டத்தில் முக்கியப் பொறுப்பு வகித்தவர் ஆதித்யா. சிஇஓவாகப் பொறுப்புகளை ஏற்கும் முன் ஆதித்யா மிட்டல் ஆர்சலர்மிட்டல் குழுமத்தின் தலைமை நிதியியல் அதிகாரியாகவும், ஐரோப்பிய வர்த்தகப் பிரிவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
1.7 பில்லியன் டாலர் வருமானம்
உலகளவில் ஸ்டீல் வர்த்தகத்தில் சுமார் 10 சதவீத வர்த்தகத்தைப் பெற்று உலகின் முன்னணி ஸ்டீல் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமாக இருக்கிறது ஆர்சலர்மிட்டல் குழுமம். டிசம்பர் காலாண்டில் ஆர்சலர்மிட்டல் குழுமம் சுமார் 1.7 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றுள்ளது.
வாரிசு கைகளுக்கு மாறுகிறதா ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம்..?!! முகேஷ் எடுத்த திடீர் முடிவு..!