ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியம், இந்திய வர்த்தகச் சந்தை மற்றும் பொருளாதாரத்தின் முக்கிய அங்கம் என்றாலும் மிகையில்லை. இத்தகைய பெரு நிறுவனத்தில் தலைமை மாற்றம் என்பது சாதாரண விஷயமில்லை. காரணம் இந்தத் தலைமை மாற்றத்தில் சரியான தலைவரை நியமிக்காவிட்டால் மொத்த சாம்ராஜ்ஜியமும் ஆட்டம் கண்டுவிடும்.
ஆகையால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தை யார் கையில் கொடுப்பது என்பதை முடிவு செய்ய முகேஷ் அம்பானி ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளார்.
ராக்கெட் வேகத்தில் வளர்ந்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சாம்ராஜ்ஜியத்தில் இந்த நிகழ்வு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடக்கிறது..?
முகேஷ் அம்பானி முக்கிய முடிவு
உலகின் 4வது பெரிய பணக்காரர் ஆக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, தனது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தை யார் கையில் கொடுப்பது, யார் யார் எந்தத் துறையைக் கவனித்துக்கொள்ளப் போவது, நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அனைவரின் கருத்துக்களும் கேட்டு ஆலோசனை செய்து அதை முறையாகச் செயல்படுத்தவும் இப்படிப் பல முக்கியக் காரணங்களை மையப்படுத்தி ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தை யார் கையில் கொடுப்பது என்பதை முடிவு செய்ய ‘family council' என்ற அமைப்பை முகேஷ் அம்பானி உருவாக்கியுள்ளார் எனத் தகவல் கிடைத்துள்ளது.
ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் யாருக்கு
இந்த ‘family council'குழுவில் முகேஷ் அம்பானி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருப்பார்கள், அனைவருக்கும் சம உரிமை உண்டு. அதிலும் குறிப்பாக முகேஷ் அம்பானியின் 3 பிள்ளைகளும் முக்கியப் பங்கு வகிக்க உள்ளனர். இந்தக் குழுவின் முடிவுகள் தான் யார் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தைத் தலைமை தாங்கப்போவது என்பது முடிவு செய்யும்.
வழிகாட்டல் மற்றும் ஆலோசனை
மேலும் இந்தக் குழுவில் முகேஷ் அம்பானி குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அல்லாமல் வழிகாட்டவும், ஆலோசனை கூறவும் ரிலையன்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலமாக இருக்கும் சில முக்கியத் தலைவர்களும் இருப்பார்கள் என லைவ்மின்ட் தெரிவித்துள்ளது.
family council
80 பில்லியன் டாலர் மதிப்பிற்கு உயர்ந்துள்ள ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வரும் காலத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டி வரும், அந்த முடிவுகளைக் குடும்பத்தையோ அல்லது வர்த்தகத்தையோ எவ்விதத்திலும் பாதிக்கக் கூடாது என்பதற்காக வர்த்தகம் சார்ந்த முடிவுகள் அனைத்தும் இக்குழுவின் ஆலோசனைக்குப் பின்பு எடுக்கப்படும் வகையில் இந்த ‘family council' கட்டமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
பாடம்
முகேஷ் அம்பானி தற்போது இந்த முடிவு எடுப்பதற்குத் தன் வாழ்க்கையில் பெற்ற அனுபவம் முக்கியக் காரணமாக உள்ளது. 1966இல் திருபாய் அம்பானி உருவாக்கிய Reliance Commercial Corporation 1973இல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆக மாறியது. 2002ல் அவரது மறைவிற்குப் பின் அவரது மகன்கள் அனில் அம்பானி, முகேஷ் அம்பானி இடையில் ஏற்பட்ட பிரச்சனையால் வர்த்தகம் மற்றும் சொத்துக்கள் இரண்டாகப் பிரிந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முகேஷ்-க்கும், ரிலையன்ஸ் குரூப் அனில் அம்பானிக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டது.
இந்தப் பிரச்சனை தற்போது தன் வீட்டிலும் வரக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே முகேஷ் அம்பானி இந்த ‘family council' அமைப்பைக் கட்டமைத்துள்ளதாகத் தெரிகிறது.
வர்த்தகப் பிரித்தல்
முகேஷ் அம்பானி தற்போது எடுத்துள்ள முடிவுகளின் படி தனது 3 பிள்ளைகள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் 3 வர்த்தகப் பிரிவுகளான ரீடைல், டிஜிட்டல் மற்றும் எனர்ஜி வர்த்தகத்தைத் தனித்தனியாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டு, வர்த்தக முடிவுகளையும், வளர்ச்சி மற்றும் விரிவாக்க முடிவுகள் அனைத்தும் இந்த ‘family council' அமைப்பில் இருந்து இறுதி முடிவை எடுக்கப்படும் எனக் கணிக்கப்படுகிறது.
வாரிசுகளுக்குத் தான் ரிலையன்ஸ்
முகேஷ் அம்பானி தனது ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தைத் தனது 3 பிள்ளைகளான ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, அனந்த் அம்பானி ஆகியோரால் மட்டுமே தலைமைதாங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.
முக்கியப் பதவிகளில் வாரிசுகள்
ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் இன்போகாம் நிறுவனத்திற்கும், ஈஷா அம்பானி ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்திற்கும் தலைவர்களாக உள்ளனர். இதோடு ஈஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி, அனந்த் அம்பானி ஆகிய மூவரும் ஜியோ நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ளனர்.
நம்பிக்கை
முகேஷ் அம்பானியின் இந்த முடிவு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகத்தில் எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது. இதேபோல் முதலீட்டாளர்களின் நம்பிக்கையும் இழக்கும் சூழ்நிலை ஏற்படாது.
இந்த முடிவைத் தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்களாகிய நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்..? பதிலை கமெண்ட்-ஆகப் பதிவு செய்யுங்கள்.