94 வருடப் பழமையான லட்சுமி விலாஸ் வங்கி தற்போது சிஇஓ மற்றும் ப்ரோமோட்டர் இல்லாமல் இயங்குகிறது. இவ்வங்கியின் நிர்வாகத்தை மறுசீரமைப்பு செய்யவும் புதிய சிஇஓ நியமிக்கவும் ரிசர்வ் வங்கி களத்தில் இறங்கியுள்ளது. இந்நிலையில் தற்காலிகமாக ரிசர்வ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகத்தை மீட்டா மக்கான், சக்தி சின்ஹா மற்றும் சதீஷ் குமார் கார்லா ஆகியிருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மோசமான நிகழ்வின் எதிரொலியாக லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் மதிப்பு இழந்து இவ்வங்கி பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டது.
இதேபோல் லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் கிளிக்ஸ் குரூப் உடனான வர்த்தக இணைப்பு ஒப்பந்தத்தின் நிலை குறித்துக் கேள்வி எழுந்தது. இதற்கான பதில் தான் தற்போது கிடைத்துள்ளது.
லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகத்தைச் சீர்படுத்த ரிசர்வ் வங்கி மற்றும் செபி நிர்வாகத்தைக் கண்காணித்து வரும் வேளையில், கிளிக்ஸ் குரூப் வர்த்தக இணைப்பிற்காக லட்சுமி விலாஸ் வங்கியிடம் ஆஃபர் கொடுத்துள்ளது.
லட்சுமி விலாஸ் வங்கி
லட்சுமி விலாஸ் வங்கியின் ஏற்பட்ட நிர்வாகக் குழு பிரச்சனைக்கு மத்தியில் கிளிக்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் வர்த்தக இணைப்பிற்கான விருப்பம் தெரிவித்துள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் இவ்வங்கியின் பங்கு மதிப்பு சுமார் அதிகப்படியாக 16 சதவீதம் உயர்ந்துள்ளது.
வர்த்தக இணைப்பு
கிளிக்ஸ் கேப்பிடல் நிறுவனம் கொடுத்த non-binding offerக்கான விருப்பத்தை ஏற்றுக்கொண்ட லட்சுமி விலாஸ் வங்கி, தனது வர்த்தகத்தை கிளிக்ஸ் கேப்பிடல் சர்வீசஸ், கிளிக்ஸ் பைனான்ஸ் இந்தியா மற்றும் கிளிக்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைக்கும் பணிகளைத் துவங்கியுள்ளது.
இந்தப் பணிகளும் ரிசர்வ் வங்கி மற்றும் செபி கண்காணிப்பில் நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
கிளிக்ஸ் கேப்பிடல்
நிதி சேவை துறையில் வர்த்தக வளர்ச்சிக்காகவும், வாடிக்கையாளர் எண்ணிக்கை வளர்ச்சிக்காகவும் லட்சுமி விலாஸ் வங்கி டெல்லியை சேர்ந்த Clix கேப்பிடல் நிறுவனத்துடன் இணைத்திடப் பேச்சுவார்த்தை நடந்தது, இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஜூன் மாதம் இரு தரப்பு மத்தியில் கையெழுத்தானது.
இந்த வர்த்தக இணைப்பால் இரு தரப்பிற்கும் பல்வேறு சாதகமான வர்த்தக வளர்ச்சி இருப்பதாகக் கருத்து நிலவி வந்த நிலையில், பல்வேறு தடைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் மத்தியில் கிளிக்ஸ் வர்த்தகத்தை இணைக்க விருப்பம் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் தாமதம்
ஜூன் மாதம் லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் Clix கேப்பிடல் சர்வீஸ், Clix பைனான்ஸ் ஆகிய கூட்டணி நிறுவனங்கள் மத்தியில் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து non-binding letter of intent ஒப்பந்தம் கையெழுத்தாகி வர்த்தக இணைப்பிற்காகத் தயாராகி வந்தது.
ஆனால் இந்த இணைப்பு மற்றும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் கொரோனா லாக்டவுன் ஆகியவற்றின் காரகணமாகக் செப்டம்பர் 15 வரையில் தள்ளிவைக்கப்பட்டது. இதற்குள் லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகக் குழுவில் பிரச்சனை பெரியதாக வெடித்தது.
பங்கு மதிப்பு
கிளிக்ஸ் குரூப்-ன் விருப்பத்தின் எதிரொலியாக லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 16 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. இன்று காலை வர்த்தகத் துவக்கத்தில் 19.10 ரூபாயாக இருந்த லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் அதிகப்படியாக 20.70 ரூபாய் வரையில் உயர்ந்தது.
வர்த்தக முடிவில் 9.83 சதவீத உயர்வுடன் லட்சுமி விலாஸ் வங்கியின் ஒரு பங்கு 19.55 ரூபாய் அளவீட்டில் முடிவடைந்துள்ளது.
லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகக் குழு
லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குதாரர்கள் மத்தியில் வெடித்த பிரச்சனையின் காரணமாக 6 இயக்குனர்கள் நீக்கப்பட்டு, தற்போது இந்த 94 வருடப் பழமையான வங்கி சிஇஓ மற்றும் ப்ரோமோட்டர் இல்லாமல் இயங்குகிறது. தற்காலிகமாக ரிசர்வ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகத்தை நிர்வாகத் தலைவர் மற்றும் சிஇஓ பொறுப்புகளை மீட்டா மக்கான் என்பவருக்கும் Committee of Directors குழுவின் உறுப்பினராகச் சக்தி சின்ஹா மற்றும் சதீஷ் குமார் கார்லா ஆகியிருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த 3 பேருக்கும் பங்குதாரர்கள் தங்களது பணிகளைத் தொடர் வாக்கு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகம் தற்போது நிலையான தலைவர் இல்லாமல் இயங்கி வருவதாலும், ரிசர்வ் வங்கி மற்றும் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி ஆகிய அமைப்புகள் நிர்வாகத்தைக் கையில் எடுத்துள்ளது.
இந்தியாபுல்ஸ் தோல்வி
சமீபத்தில் லட்சுமி விலாஸ் வங்கியைக் கைப்பற்ற இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் முயற்சி செய்த போது ரிசர்வ் வங்கி மறுப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது Clix கேப்பிடல் உடனான வர்த்தக இணைப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.