இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டிற்குள் வந்த லட்சுமி விலாஸ் வங்கி மீதான நம்பிக்கையை இழந்த மக்கள் இந்நிறுவனப் பங்குகளைக் கடந்த 6 நாட்களாகத் தொடர்ந்து விற்பனை செய்து வரும் காரணத்தால் லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் சுமார் 53 சதவீதம் வரையில் சரிந்து முதலீட்டாளர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
அதிகளவிலான வராக்கடன், நிர்வாகக் குழுவில் தொடரும் பிரச்சனை என அடுத்தடுத்து லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகம் மோசமான நிலையை அடைந்து வரும் வேலையில் ரிசர்வ் வங்கி தலையிட்டு இவ்வங்கியைச் சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் DBS வங்கியுடன் இணைக்க ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து இறுதி முடிவை இன்னும் எடுக்கப்படாத நிலையில் லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் அதிகளவிலான சரிவை அடைந்து முதலீட்டாளர்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.
நாட்கள்
ரிசர்வ் வங்கி கோரிக்கையின் அடிப்படையில் கடந்த 17ஆம் தேதி மத்திய நிதியமைச்சகம் லட்சுமி விலாஸ் வங்கி மீது மோராடோரியம் கட்டுப்பாடுகளை விதித்து இவ்வங்கி வாடிக்கையாளர்களையும், முதலீட்டாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் அடுத்தச் சில மணிநேரத்தில் இவ்வங்கியைக் காப்பாற்றும் திட்டத்தையும் ரிசர்வ் வங்கி அறிவித்தது.
லட்சுமி விலாஸ் வங்கி ஆலோசனை
லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் DBS வங்கி இணைப்பின் மூலம் முதலீட்டாளர்களுக்கு எவ்விதமான லாபமும், நன்மையும் இல்லை எனக் கருத்து நாளுக்கு நாள் உறுதியாகி வரும் நிலையில் இந்நிறுவனப் பங்குகளும் தொடர்ந்து சரிந்து வருகிறது. முதலீட்டாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும் காரணத்தால் லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகம் ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனை செய்து வருகிறது.
ரிசர்வ் வங்கி
இதனால் லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் DBS வங்கி இணைப்பு குறித்து இன்னும் முழுமையான முடிவை எந்தத் தரப்பும் எடுக்காத நிலையில் முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். இரு வங்கிகளின் இணைப்பு குறித்து ரிசர்வ் வங்கி இந்த வாரத்தின் இறுதிக்குள் முடிவை எடுக்கும் எனக் கூறப்படுகிறது.
லோவர் சர்கியூட் அளவு
இந்நிலையில் 17ஆம் தேதி முதல் லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், கடந்த 6 வர்த்தக நாட்களாகத் தினமும் லோவர் சர்கியூட் அளவை அடைந்து வருகிறது.
53 சதவீத சரிவு
கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் லட்சுமி விலாஸ் வங்கியின் ஒரு பங்கு 15.55 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் சுமார் 53 சதவீத சரிவைச் சந்தித்து இன்று 7.30 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.