தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் வெகு சில வங்கிகளில் மிகவும் முக்கியமான வங்கியாக இருக்கும் லட்சுமி விலாஸ் வங்கியின் மீது மத்திய நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி இணைந்து moratorium கட்டுப்பாடுகளை விதித்ததைத் தொடர்ந்து புதன்கிழமை வர்த்தகத்தில் 20 சதவீதம் சரிவைப் பதிவு செய்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில், 2வது நாளாக இன்றும் லோவர் சர்கியூட் அளவை அடைந்துள்ளது.
Recommended Video
லட்சுமி விலாஸ் வங்கி சுமார் 25 சதவீதம் அளவிலான வராக்கடனை வைத்துள்ள நிலையில் இவ்வங்கியைத் திவாலாகும் நிலையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுடன் ரிசர்வ் வங்கி இவ்வங்கியை DBS வங்கியுடன் இணைக்கத் திட்டம் வெளியிட்டுள்ள நிலையிலும் முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது.
இதன் எதிரொலியாகவே 2வது நாளாக இன்றும் லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் 20 சதவீத வீழ்ச்சியை அடைந்துள்ளது.
பங்குகள் தொடர் வீழ்ச்சி
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் விலை 15.60 ரூபாய்க்கு முடிவடைந்தது. செவ்வாய்க்கிழமை மாலையில் தான் ரிசர்வ் வங்கி moratorium கட்டுப்பாடுகளை விதித்து இவ்வங்கியின் 25,000 ரூபாய்க்கு அதிகமாகப் பணப் பரிவர்த்தனை செய்யக் கூடாது என அறிவித்தது.
முதல் நாள்
இந்நிலையில் புதன்கிழமை வர்த்தகத்தில் moratorium கட்டுப்பாடுகளின் எதிரொலியாக வர்த்தகம் துவக்கம் முதலே சரிவைச் சந்தித்த லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் 15.60 ரூபாயில் இருந்து 12.45 ரூபாய் வரையில் சரிந்தது.
இந்தத் தடாலடி வீழ்ச்சி முதலீட்டாளர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை.
2வது நாள்
லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் மீது moratorium கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு 2வது நாளான இன்று வியாழக்கிழமையும் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தின் காரணமாகத் தொடர் வீழ்ச்சி பாதையில் 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
வியாழக்கிழமை வர்த்தகத்தில் லட்சுமி விலாஸ் வங்கி பங்குகள் 12.45 ரூபாயில் இருந்து 10 ரூபாய் வரையில் சரிந்து 19.68 சதவீத வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
10,000 கோடி ரூபாய்
லட்சுமி விலாஸ் வங்கியில் மக்களுக்குத் தங்களது டெப்பாசிட் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் அளவிற்குப் போதுமான நிதி உள்ளதாகவும், மக்கள் யாரும் பணம் குறித்துப் பயப்பட வேண்டாம் எனத் தெரிவித்த பின்பும் மக்கள் புதன்கிழமை மட்டும் சுமார் 10,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை இவ்வங்கியில் இருந்து வெளியில் எடுத்துள்ளனர்.
மறுபரிசீலனை
இந்நிலையில் லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகக் குழு ரிசர்வ் வங்கி கொடுத்த DBS வங்கி இணைப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி ஆலோசனை செய்து வருகிறது.
இரு வங்கிகள் மத்தியிலான இணைப்பு நவம்பர் 20ஆம் தேதி தான் இறுதி முடிவு தெரியும்.